ஞாயிறு, 9 டிசம்பர், 2012


பருவ மாற்றம்

             ஆயுர்வேத சித்த மருத்துவ புத்தகங்களில் இந்திய திருநாட்டில் ஆறு பருவங்கள் நிலவியதாகவும் அதை அனுசரித்து மக்கள் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவை முறையே ஹேமந்த காலம் (பின்பனிக்காலம்), சிசிரகாலம் (முன்பனிக்காலம்), வசந்த காலம் (இளவேனில் காலம்) கிரிஷ்மகாலம் (முதுவேனில் காலம்), வர்ஷ காலம் (கார்காலம்), சரத்காலம் (கூதிர்காலம்) என ஆறு வகைப்படும். இந்த ஆறு பருவங்களையும் இன்றைய சுற்றுச்சூழலில் காண்பது சற்று கடினமானது. தமிழ்நாடு போன்ற இடங்களில் சரத் காலத்தையும் வசந்த காலத்தையும் நாம் அதிகம் காண முடிவதில்லை. மழையும் குறித்த சமயத்தில் வருவதில்லை. கோடையின் வெப்பம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒரு மனிதனுடைய வாழ்நாளில் ஒரு நாளை எடுத்துக் கொண்டால் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உள்ள 24 மணி நேரமும் 4 மணி வீதமாகப் பிரித்து (6 x 4=24  என்ற விகிதத்தில்) இந்த ஆறு ருதுக்களும் அவன் உடலிலேயே ஏற்படுகின்றன. ஒவ்வொரு ருதுவுக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. இந்த குணங்கள் நான்கு மணி வரை உடலில் நிலைத்து இருக்கின்றன. இந்த ஆறு குணங்களுமே சிகிச்சைக்கு முக்கியமான குணங்கள், நோய்க்கு முக்கியமான குணங்கள். இந்த ஆறு குணங்களையும் சரகர் ஷட்வித உபகிரமமாக (சிகிச்சையாக) சொல்கிறார். 
         இதை என்னிடம் நேரடியாகவோ, என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடமிருந்தோ மற்றும் ஆசிரியர்களிடமிருந்தோ நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒரு நோயாளி ஒரு நாளில் எந்த நேரத்தில் நன்றாக இருக்கிறான் என்பதைத் தெரிந்துக் கொள்ளும்போது எந்த ருதுவின் குணத்தினால் அவனுக்கு சுகம் கிடைக்கிறது என்பதையும், எந்த நிலையில் கஷ்டப்படுகிறான் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். 



பிரக்ருதி அறியும் முறை


பல நேரங்களில் இடுப்பு வலியுடன் கூடிய நோயாளி அல்லது மூல நோயுடன் வருகின்ற நோயாளியிடம் நாம் பிரக்ருதியை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்ற பொழுது நோய்நிலை என்கின்ற விக்ருதியால் (overlapping features of disease)   நமது நிர்ணயத்தில் தவறு ஏற்படுகிறது. 

              அதனால் மாற்றவே முடியாத சில பிறவிக் குறியீடுகள் (anatomical features) மூலம் துல்லியமாக பிரக்ருதியை கண்டுபிடிக்க முடியும். இதற்கு உதாரணமாக காலின் உட்பகுதியில் இருக்கின்ற வளைவு, விரல்களின் நீளம் (அங்குலீ பிரமாணம்) போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் ஆசிரியர் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். இந்தப் பாடமுறைகள் திரிதோஷத்தின் அடிப்படை விஷயத்தில் தெளிவு பெற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும். இதை ஆசிரியரிடமிருந்து நேரடியாகவோ, ஆசிரியரிடம் பாடம் பயின்ற மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பஞ்சபூத ஆராதனை

நமது பூத உடல் பஞ்சமஹா பூதத்தால் ஆனது. உணவும் அன்ன ரஸமும் பஞ்சமஹா பூதத்தையே சார்ந்துள்ளது. பஞ்ச மஹாபூதத்தில் துவங்குகின்ற சிருஷ்டியானது பஞ்சமஹா பூதத்திலேயே ஒடுங்குகிறது. உலகில் உள்ள எந்த வஸ்துவும் பஞ்சமஹா பூதத்தின் தொடர்பு இல்லாமல் இல்லை. மெய்ஞான தேடுதலில் பஞ்சமஹா பூதத்தின் கீழ்கண்ட தன்மைகளைத் தியானித்து ஆராதனை செய்து மெய்ஞான அறிவை, தெளிவைப் பெறலாம். 

பூமி
வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களைப் பொறுமையாகக் கையாளுதல் போன்றவை பூமியைப் பார்த்து உணரலாம். அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்று வள்ளுவர் கூறியதை நினைவில் கொள்க.

நீர்
எங்கு உற்பத்தியானாலும் ஒரு லட்சிய இடத்தை நீர் சென்று சேர்கிறது. குறிக்கோளை அடைதல் என்பதை ஜல மஹாப் பூதத்தைத் தியானம் செய்வதன் மூலம் அடையலாம்.

நெருப்பு
நல்லவரோ தீயவரோ, வலியவரோ சிறியவரோ, யார் கை வைத்தாலும் ஒரே தண்டனையைத் தரும் என்ற தத்துவம் அக்னி மஹாபூதத்தைச் சார்ந்த்து. இவ்வாறு நோயாளிகளிடம் பாரபட்சம் இல்லாமல் செயல்படும் அறத்தை, தர்மத்தை, அக்னித் தத்துவம் மூலம் உணரலாம்.

வாயு
எதிலும் பட்டும் படாமலும், தாமரை இலை மேல் காணப்படும் நீர்த்தன்மையைப் போல், உலகில் இருந்தும் பட்டும் படாமலும் வாழும் தன்மையை வாயு தத்துவம் மூலம் உணரலாம்.

ஆகாயம்
எங்கும் நிறைந்து இருக்கும் சைதன்யம் மற்றும் சூன்யம் எனும் தத்துவத்தை ஆகாய மஹாபூத தத்துவம் மூலம் ஆராதிக்கலாம்.