திங்கள், 4 நவம்பர், 2013

திலீப் எனும் நண்பன்
ஒரு கண்ணீர் அஞ்சலி

அழிவினவை நீக்கி யாறுய்த் தழிவின்க
மூல்ல லுழப்பதா நட்பு
குற - 787

அன்றொரு நாள் காலை பொழுது மணி 9 இருக்கும். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். பொதுவாக ஆயுர்வேதத்தை பேசுகின்ற எனக்கு சமீப காலமாக காலையில் எழும்புவதோ தினசர்யையை எனது வாழ்க்கையில் கடைபிடிப்பதோ கடினமானதாக இருக்கிறது. ஒயாமல் எனது கைபேசி ஒலித்து கொண்டிருந்தது. தூக்க மாத்திரையை சாப்பிட்ட நான் எனது கைபேசியை தேடினேன். கைபேசி இருக்கும் இடம் தெரியவில்லை. மனதில் இந்த கைபேசியை அணைத்துவிட்டு அதிகமாக ஒரு மணி நேரம் தூங்கலாம் என்ற எண்ணம் இருந்தது. எனக்கு தெரிந்த இடங்களில் கையை விட்டு துலாவிப் பார்த்த பொழுது கைபேசி கிடைக்கவில்லை. மணி 9.45 க்கு ஜீவா வந்து என்னை எழுப்பினான். அநேக நாட்களில் அவன் இவ்வாறு செய்வதுண்டு. எழுந்ததும் வந்ததும் வராததுமாக நெஞ்சைப் பதற வைக்கின்ற ஒரு நிகழ்வை அவன் கூறினான். உங்களது நண்பர் திலீப் என்ற ராஜரத்னம் நேற்று இரவு விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை அவன் சொல்லிவிட்டு பெரிய பெட்ஷீட்டை மடித்து வைக்க தொடங்கினான். அவனுக்கு அது சஞ்சலமில்லாத ஒரு செயலாக இருந்திருக்கும். நிறைய நோயாளிகளைப் பார்த்த உடல்வலி, இயற்கையாகவே மனதைத் தாக்கி இருக்கின்ற விசாதம் இவற்றுடன் எழுந்து அமர்ந்தேன். இவற்றுடன் எப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது என்று கேட்ட பொழுது சஜுக்கு போன் வந்தது. சஜு உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார், நீங்கள் போனை எடுக்கவில்லை என்று கூறினான்.  சஜுக்கு சிவகுமார் தகவல் அனுப்பியதாக நான் தெரிந்து கொண்டேன். YMCIA ஹாஸ்டலில் என்னுடன் தங்கியிருந்த ஹோட்டல் சிவகுமார் என்று நான் நினைத்தேன். இது அன்புடன் நான் சிவபழம் என்று அழைக்கின்ற YMCIA -ல் அதிகாலையில் எங்களையெல்லாம் விழித்து எழச் செய்கின்ற சிவகுமார் என்று பின்னால் அறிந்து கொண்டேன். உடனடியாக காலைக் கடனை அவசர அவசரமாக முடித்து விட்டு கீழே வந்து அமர்ந்தேன். பரபரப்பாக மனது இருந்தது. இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்பதற்கான பதிலும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் திலீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் வேலையில் இருந்த காரணத்தினால் எனது அழைப்பை ஏற்கவில்லை. திருப்பி அவர் பலமுறை கூப்பிட்ட பொழுது என்னுடைய மனோத் தன்மை காரணமாக நான் பின்பு பேசுகிறேன் என்று கூறிவிட்டேன். அவர் உடனே என்னுடைய மனைவி சாரதாவை கூப்பிட்டு பேசி என்னுடைய மனஅழுத்தங்களும், பிரச்சனைகளும் எல்லாம் மாறும் என்றும் நான் கூட இருக்கிறேன் என்றும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளித்ததாக சொன்னாள். அப்பொழுதும் நான் திலீப்பை அழைத்துப் பேசவில்லை இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் சுமார் 25 வருடங்களுக்கு முன் சென்னை ராயபேட்டையில் உள்ள YMCA விடுதியில் நாங்கள் சந்தித்தது, விளையாடியது, சினிமாவுக்கு சென்றது, சாப்பிட்டது, ஒரே அறையில் தங்கி தூங்கியது போன்றவையெல்லாம் நிழல்படம் போவது போல் பசுமரத்தாணிப் போல நினைவில் வந்தது. நீண்ட உயரம், தீர்க்கமான தரிசனம், பொய் சொல்லாத ஒரு உயிர். நேர்மை, உண்மை, அஞ்சாமை, புறம் கூறாமை, சினம் கொள்ளாமை, உள்ளதை உள்ளவாறு கூறுதல், பிறருடைய இயலாமையை ஏற்றுக் கொள்ளுதல், தற்புகழ்ச்சி இல்லாமை போன்றவற்றில் எல்லாம் தன் நிகரற்றவராக அவர் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. M.Com, ICWAI, ACS 
என்ற உயர்ந்த படிப்புகளையெல்லாம் சர்வ லகுவாக எந்தவித கடினமும் இன்றி கற்று தேர்ந்தார். சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக அவருக்கு இருந்தது. 


இப்பேர்ப்பட்ட மனிதர் இன்று நம்முடன் இல்லை. அந்த ஆஜானபாகுவான உருவம், வெள்ளை சிவப்பு நிறம் கலந்த உடம்பு, சிரித்துப் பேசும் தன்மை, தட்டிக் கொடுக்கும் மனோபாவம், இத்தகைய மனிதரை இனி ஸ்தூல சரீரத்தில் நம்மால் காண இயலாது. காலம் என்கின்ற மகா மாயை பல சந்தர்ப்பங்களிலும் கொடூரமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பல பெரியவர்கள் கலியில் கோரமான மரணத்தை கண்டிருக்கிறார்கள். அகால ம்ருத்யூ, அப ம்ருத்யூவே அவர்களை வாட்டி இருக்கிறது. பல அயோக்கியர்களும், அரசியல்வாதிகளும் கொழுப்பேறி வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற காலத்தில் நல்லவர்கள், விபத்துகளிலும், புற்று போன்ற நோய்களிலும் இறப்பதை நாம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 
பிறப்பதும், இறப்பதும் இயற்கை நிலை. முதலில் தோன்றுகின்ற உருவத் தோற்றங்கள் சிலக் காலம் நிலவி மருவிப் போகின்றன. அவ்வாறு மறைதலை நாம் இறப்பு என்கின்றோம். இது விழிப்பும், உறக்கமும் போன்றது. 

“உறங்குவதும் போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பதும் போலும் பிறப்பு“
என்கிறது குறள் 339

பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது
மணிமேகலை 16 

சாவதும் ஒருவகை உறக்கம். இவ்வாறு பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வருகின்றன என்பதை சிவஞான சித்தியார், சீவக சிந்தாமணி, இராமாயணம், பாரதம் பிரபுலிங்க லீலை, சேதுபுராணம் போன்றவை விளக்குகின்றன. 
பிறந்த ஒரோர் மனிதனும் வளர்ந்து வருகிறான் ஆனால் அவ்வளர்ச்சி சாவை நோக்கியே நடந்து வருகிறது. ஆயுள் ஒரோர் நிமிடமும் தேய்ந்து வருகிறது. நிலையாமையே நிலையானது. மரணம் உயிர்வாழ்வின் முன்னறிப்பாக உள்ளது என்கிறார் புக்கர். நல்ல சிந்தனையோடு புனிதமாய் வாழ்கின்றவனுக்கு இன்மையும், மறுமையும் இல்லை. எனது திலீப்பும் அவ்வாறே வாழ்ந்தவர் இதற்கு யாரிடமிருந்தும் சான்றிதழ் தேவை இல்லை.
வையக வாழ்வை விட வானக வாழ்வு அவருக்கு மேன்மையாய் அமையும். இதுவும் திண்ணம். இதில் சந்தேகமும் இல்லை. சிவ ஒளி அவர்பால் மேவி நிற்கும் அதில் அவர் உயிர் மிளிரும் அதற்கும் சந்தேகம் இல்லை. மரணத்திற்கு அவர் அஞ்சியது இல்லை இது உயிரோடு கலந்த எனக்கு தெரியும். வாழ்வில் அவர் சந்திக்காத கஷ்டங்கள் இல்லை. கஷ்டம் இப்பொழுது நமக்குதான். மனம், மொழி, மெய்யில் அவர் புனிதமாய் இருந்தார். புண்ணியம் செய்த ஆத்மா அவர். உடல் நிலையற்றது என்பதை அவர் அன்றே அறிந்திருந்தார். அந்த எண்ண தோற்றங்களை பல சந்தர்ப்பங்களில் என்னுடன் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு அச்சம் இல்லை. அச்சம் கொச்சையாக இருந்தது. அவர் வாழ்வில் சந்தித்த சவால்கள் எண்ணற்றன. விவேகமற்ற செயல்களை அவர் செய்ததில்லை. ஊழிப்படி செயல்கள் நடந்தது. அது முடிந்துவிட்டது. அது இயற்கை நியதி அந்த இயல்பை அவர் உணர்ந்திருந்தார். கீதையும் இதையே பேசுகிறது. அவர் எடுத்தப் பிறவியில் நல்லதையே செய்திருக்கிறார். பாக்கியவனாக சிறந்து விளங்கினார். பிறருடைய உள்ளத்தை கவர்ந்தார். மனிதரில் மேன்மையானவனாக இருந்தார். 
இறப்பு ஒருநாளும் அவர் நினைவுகளை அழிக்காது. புல்லின் நுனியில் உள்ள பனித்துளிப் போல் அவர் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆதி சங்கரர் குறுகிய காலமே வாழ்ந்தார் குறுகிய காலமே வாழ்ந்தார். மகாகவ¤ சுப்பிரமணிய பாரதியார் குறுகிய காலமே வாழ்ந்தார், காருக்குறிச்சி அருணாச்சலம் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் இன்றும் அவர்களைப் பற்றி பேசுகிறோம். நாம் திலீப்பின் நற்குணங்களைப் பற்றி என்றும் பேசுவோம். எங்கெங்கு நற்குணங்களும், நட்பும் பிரிக்காத முடியாமல் இருக்கின்றதோ அங்கு திலீப் இருப்பார். 20 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். அவர் நித்திய முக்தனாகவே திகழுவார். அவர் நம்மைப் பொறுத்த வரை ஒரு ஞான வீரன். வானுலகில் உய்த்து வாழ்கிறார். யாருக்கும் அவர் பயப்படவில்லை, இவரை கண்டு பிறர் பயந்தனர். என்னைப் பொறுத்த வரை அவர் ஒரு மகான். இன்றும் அழியாத பேருலக கதவுத் திறக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கிறார். மதி நலம் மிக்க மனிதப் பிறப்பை அவர் வாழ்ந்தார். வாழ்வில் பொன்னான காலம் வீணாகியது. வேலைக்கு போகவில்லை, பொருள் ஈட்டவில்லை, குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் அவருக்காக வாழவில்லை, பிறருக்காக வாழ்ந்தார், இறுதியில் குறிக்கோளோடு வாழ்ந்தவர். இறுதி நிலையில் நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னிடம் கூறினார். கூரிய அறிவும், சீரிய கருத்தும், சிறந்த குறிக்கோளும் அவர் வாழ்க்கையை மகிமைப்படுத்தி வந்தன. கூட்டை விட்டு பிரிந்தப் பறவைப் போல உடம்பை விட்டு அவர் பிரிந்து போனார். என்னுடைய சகோதரர், நண்பர் சிலகாலம் உலவித் திரிந்த பொழுதிலும் இன்று அருவமாகி இருக்கின்ற நிலையிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை யாருடைய மனதையும் விட்டுப் பிரியாது. அறம்சார் தர்மம் நற்கதியையே அவருக்கு கொடுக்கும். நரக வேதனை என்பது அவருக்கு கிடையாது. அவர் அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்து விட்டார். பரமசிவனே இந்தப் பசுவை உன்னுள் சேர்த்துக் கொள்ளும் அப்பா என்று கலங்கி நான் பிரார்த்தனை செய்கிறேன். என் சகோதரியின் மனதிற்கு பிரார்த்தனை செய்கிறேன். 
இதற்கு காரணம் நமக்கு தெரியாது. கர்மா என்று சொல்லிவிடலாம் ஆனால் நிரூபிக்க முடியாது. சாபம் என்று சொல்லிவிடலாம் அதையும் நிரூபிக்க முடியாது. இப்படி நிரூபிக்க முடியாத நிலையில் கண்ணெதிரே ஒரு மரணத்தை காண்கின்ற பொழுது வள்ளுவர் தான் நமக்கு கைக்கொடுக்கிறார். உறங்குவது போலும் சாக்காடு உறங்கி எழுவதும் போலும் பிறப்பு என்கிறார். ஆற்று வெள்ளம் அடித்துச் செல்வது போல உயிர் பிரிந்து விட்டது ஆனால் இருப்பவர்கள் சொல்லொணா துயரில் அவதிப்படுகிறார்கள். எனது சகோதரி திருமதி. ராஜரத்னம் அன்பே வடிவான அவரது அன்னையார் அவர்களை நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. புத்திரனின் மரணத்தை தாயார் காண்பது கொடூரத்தின் கொடூரம். திருமதி. ராஜரத்னம் கதறி அழுதப் பொழுது என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. இந்த உயிர் எங்கு இருக்குமோ, என்ன செய்து கொண்டிருக்குமோ, அதற்கு தவிப்பு உண்டா, அது இரண்ணிய கர்ப்பத்திற்கு போகுமா, அதற்கு அமைதி உண்டா, அது மறுபிறப்பு எடுக்குமா இவை ஒன்றும் நம்மால் விடைசொல்லா முடியாத பதில். ஆனால் ராஜரத்னம் என்ற மனிதப்பண்பு அவருடைய ஒழுக்கம் என்றென்றும் எங்களுடைய இதயத்திலாவது நிலைத்து இருக்கும். 
மரணமே உன்னை ஒரு மரணம் வந்து தழுவாதா? விபத்தே உன்னை ஒரு விபத்து தழுவாதா? துக்கமே உன்னை ஒரு துக்கம் சூழாதா, பரிதவிப்பே நீ ஒரு நாள் பரிதவிக்க மாட்டாயா? என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ஞாயிறு, 16 ஜூன், 2013

பிஷக் உத்தமன்

மருத்துவர் இல. மகாதேவன் - பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்) 
கட்டுரை - மருத்துவர். சுனீல் கிருஷ்ணன்
இக்கட்டுரையை காண   http://solvanam.com கிளிக்கவும்.

செவ்வாய், 4 ஜூன், 2013

Malaysia visit

Dr.L.Mahadevan visited Malaysia, from May 2nd to May 4th to deliver his treasured classes on ayurveda, at BKS Iyengar Yogashala, Kuala lumpur. The classes were about “Ayurveda, the traditional Indian medicine”.  The doctors practicing allopathic system and other traditional medicinal systems were the participants. Dr.Mahadevan’s class covered all  basics of ayurveda, including the topics like ayurveda and philosophy, understanding the mind, body constitution in ayurveda, dietetics in ayurveda, , agni and its importance and preventive medicines in ayurveda. There were about 100 doctors in his class. The feedback of the classes were excellent.





திரிதோஷ தத்துவ மரபில் நவீன விஞ்ஞானத்தின் (மருத்துவத்தின்) தன்மைகளை உள்வாங்குவதில் உள்ள ஆதரவும் எதிர்ப்பும்

பிப்ருவரி 14 - டாக்டர். பி. வைத்தியநாதன் சார் நினைவு நாள் கட்டுரை 

     திரிதோஷ தத்துவ மரபை ஏற்றுக் கொள்வதில் மேலை நாட்டு மருத்துவர்களுக்கும், நமது நாட்டில் வாழ்கின்ற ஆங்கில மருத்துவத்தை விதிவசத்தால் படித்த ஒரு சில மருத்துவர்களுக்கும், ஒரு அகத் தடை இருந்து கொண்டெ இருக்கிறது. வாத, பித்த, கபங்கள் என்று ஒன்றும் இல்லை, என்றும் இவை வெறும் சொற்றொடர்கள் மட்டுமே என்று மெய்ஞானம் பெறாமல்  சொல்பவர்கள் உண்டு.

இந்த விவாதங்கள் இன்று அதிகமாகப் பேசப்படுவதில்லை. இந்திய மருத்துவ இயலில் முக்குற்ற மெய்ஞானம், தனக்கென்று உள்ள சத்திய நிலையை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது. திரிதோஷ அடிப்படையில் உள்ள நம் பாரத நாட்டு மருத்துவம் நவீன பார்வையிலிருந்து வேறுபட்டது என்பது ஏற்கப்பட்டு வருகிறது. இந்த தனித்தன்மைதான் என்ன? மேலைநாட்டு மருத்துவத்துறை பிரபஞ்சத்தையும், அக வாழ்க்கையையும் விட்டு வெளியேறி உடல் சார்ந்த நோய்களை மட்டும் நிழற்படங்கள் மூலம் வரையறுத்து சிகிச்சை செய்து கொண்டிருந்தது (ஒரு நிலை வரை இது தேவை என்றே நான் கருதுகிறேன்). 

  இக்காலமானது மாறி, வெளி நம்பிக்கையை மட்டும் சாராமல் மருத்துவம் என்பது இறையியல் மற்றும் அறவியல் இவற்றிலிருந்து பிரிக்க முடியாத, மற்றும்  தனித்தும் இயங்க முடியாத ஒரு தத்துவம் அல்லது த்ர்சனம் என்பதை இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேத மருத்துவமும் சித்த மருத்துவமும் போதித்து வருகின்றன. 

மேலைநாட்டு மருத்துவம் சில விதிகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றுள்ளேயே இயங்குகிறது. Evidence based medicine (ஆதாரம் சார்ந்த மருத்துவம்) என்ற ஒரு தத்துவத்தை அது பறை சாற்றுகிறது. நாம் நவீன மருத்துவ இயலில் பல வளர்ச்சிகளை மனமார ஏற்றுக் கொண்டு அவற்றைப் போற்றினாலும் திரிதோஷ மெய்ஞானத்தில், எல்லாவற்றையும் உள்ளடக்கி நவீன மருத்துவத்திற்கும் இந்திய மருத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கி, ஒருங்கிணைந்து நன்றாக செயலாற்ற முடியும் என்று நம்பி சிகிச்சையளித்து வருகிறோம். யதார்த்தத்தில் இதில் வெற்றிகள் பல. தோல்விகள் சில.

ஒரு எல்லை உடல் நிலை நோய்கள்
மறு எல்லை மெய்ஞானம். 
ஒரு தரிசனம் ஆயுர்வேதம்
மற்றொன்று ஆங்கில மருத்துவம். 
இவற்றுக்கு நடுவில் அன்றாட வாழ்க்கை. 

இந்திய மருத்துவத்திற்கு என்று தனி தத்துவம் இருக்கிறது.  ஒரு தேடல் இருக்கிறது. தேடுதல் மூலம் கண்டடைதல் உள்ளது.  இவை பிரிக்க முடியாமல் இருக்கின்றன. சில வரையறுக்க (கருவிகளால் காண இயலாத) முடியாத விஷயங்களை இந்திய மருத்துவம் பேசுகிறது. ஆண்டாண்டு காலமாக இறை இயலைத் தொட்டு அந்த விஷயம் நடந்து வருகிறது. பிரிக்கமுடியாதபடி வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் பார்கும் பார்வையின் விளைவே முக்குற்ற மெய்ஞானம். பகுத்தறியும் நோக்கை மேலை நாட்டு சிந்தனை பெரிதும் சார்ந்திருக்கிறது. ஆயுர்வேத மருந்துகளுக்கு என்று பலசுருதிகள் (பிரயோகங்கள்) உள்ளன. இருந்தாலும் எல்லாவற்றுக்கும் நமது இறுதி நிலை என்பது விடுதலை என்பதுதான். 

· நோயிலிருந்து விடுதலை,
· அறியாமையிலிருந்து விடுதலை,
· துக்கத்திலிருந்து விடுதலை,
· பெருமைச் சூழலிலிருந்து விடுதலை,


இந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவம். ஒரு மெய்ஞான தேடுதலின் அம்சமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த விடுதலைக்கான சிந்தனைகள் நிகழ வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். நமக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவைத் தெளிவாக்க (சரகர் கூறியபடி) திரிதோஷ அறிவு பாலமாக அமையும் என்றே நினைக்கிறேன். 

என் அகம் தெளிந்திருப்பதால் திரிதோஷம் சார்ந்த மருத்துவச் சூழலில் மேற்படியாக நடக்கும் Superficial discussion களை (சிகிச்சா ஞானமோ, அகத் தெளிவோ இல்லாமல், நடக்கும் மேல்மட்ட உரையாடல்கள்) நான் கவனிக்காமல் சிகிச்சையளிப்பதில் முழு முனைப்போடு செயல்படுகிறேன். மண்டையைப் பிளக்கும் சொல் ஆராய்ச்சிகள், பேராசிரியர் மற்றும் முதல்வர் பதவியை அடைய நடக்கும் அரசியல்கள், மடக்கி மடக்கி முன் வைக்கப்படும் தர்க்கங்கள், பிறர் சொன்னதையே திருப்பிச் சொல்லும் தத்தை போன்ற மனப்பாட பாடல்களின் ஒப்புவிப்புகள்,இவற்றிலிருந்து விலகி சிகிச்சையளித்து அதன் மூலம் திரிதோஷத்தை உணர்ந்து பிறருக்கு போதிக்க முயற்சிக்கிறேன். திரிதோஷம் சார்ந்த பூசல்களில் நான் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் நான் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் சிகிச்சை செய்கிறேன். என் குருநாதர் சொல்லித் தந்ததுதான் சரி என்று நான் வாதிட வரவில்லை. என் குருநாதர் சொல்லித் தந்ததும் சரி என்றே நான் வாதிடுகிறேன். ஒரு மஹாவித்வான் கல்யாணியை பல ரூபங்களில் பாடுகிறார்; இன்னொருவர்; வேறு கோணத்தில் பாடுகிறார். இறுதியில் கல்யாணி பாடினாரா என்பதே கேள்வி. அதுவும் இதயத்தைத் தொட்டதா என்பதும் மற்றொரு கேள்வி அந்த நிலையிலேயே திரிதோஷத்தை நான் கையாண்டு வருகிறேன்.

இந்த தத்துவங்களில் ஐயம் கொள்ள எனது மாணவர்களுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. அந்த தத்துவத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்ய நான் உதவுகிறேன். இதுதான் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட அல்லது வரையரைக்கப்பட்ட காலத்திற்குள் பாடத்திட்டத்தை முடிக்க பிரயத்னப்படும் ஒரு பேராசிரியருக்கும்  எனக்கும் உள்ள வேறுபாடு. எனக்கு எனது முழு வாழ்க்கையும்  திரிதோஷ பாடத்திட்டமாகும் அனுதினமும் தேர்வுமாகும்.  ஓரோர் நோயாளியும்  என்னுடைய பாட முறையில் தேர்வாளர்கள் ஆவர்.

படிப்பவவர்கள் முதலில் உள்ளை அறிய வேண்டும். இதை Applied Tridosha என்று சொல்வேன்.   இந்நிலையில் தன் அகத்தை தானே காணவும், அதன் மீதான கட்டுப்பாட்டை அடையவும் இது கைகொடுக்கும்; என்பது என் பாடமுறை. நமது சிந்தனை முறை உடலையும், மனதையும் பிடித்துப் பார்ப்பது அல்ல. உடல் மனம் என்கிற ஒரே அமைப்பாகவே மனிதனைப் பார்க்கிறது. முழுமையான ஒரு மருத்துவத் தீர்வை நோக்கிச் செல்லவே உடலையும், மனதையும் ஒன்றாகக் காணும் திரிதோஷத்தின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. திரிதோஷ ஞானமோ திரிதோஷத்திற்காக அளிக்கப்படும் மருந்துகளோ ஊடுருவி படிமன்கள் போல செயல்படக் கூடியவை. இவை நமது தர்க்கத்தைத் தாண்டி பல அடுக்குகளை சென்று சேரும் படிமங்கள்  அவற்றுடன் நவீனம் சேருவது நோயாளிகளுக்கு நல்லது. நமக்கும் தவறுகள் குறையும். 

மனித பிரக்ஞை என்பது மனித உடலிலிருந்து விடுபடமுடியாதது.
நம் அகம் என்பது நாம் நமது உடலில் புலன்கள் மூலம் உணரும் அறிதலின் நுண் படிவமாகவே உள்ளது. படிமங்களாலும், மொழி  உருவங்களாலும்தான் நாம் நமது அகத்தை உணர முடிகிறது. அதில் நம் கல்லூரிப் படிப்பும் (BAMS) படிகிறது. அதைப்பின் நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. திரிதோஷத்தின் அகால  இருப்பு சூக்ஷ்மமானது என்பது சாதாரணமான நம் அறிதல்களுக்கு அப்பால் உள்ளது. இந்த நிலையிலிருந்தே திரிதோஷத்தின் தாக்கம் தொடங்குகிறது.

திரிதோஷ ஞானம் என்பது ஒரு தேடல். அதற்கு ஒரு குரு, ஆசிரியர் இருந்தால் நல்லது. அவ்வாறு ஒருவர் அமையும் வரை நமக்குப் பல விஷயங்கள்  புரியாது.  அடி ஆழத்தை திறக்க முடியாது. அது திறக்க முடியாமல் விடுதலையும் இல்லை. அதனைத் திறந்து பரிசீலித்தாக வேண்டும். அதனை முன்னிலைப் படுத்த ஒரு ஆசிரியர் வேண்டும்.  அந்த குருவை நீங்கள் சோதித்து நோயாளிகளை வைத்து விசாரணை செய்து ஏற்கலாம். இங்கு அவநம்பிக்கையும் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் அவரை ஏற்றபின், அந்த நம்பிக்கை உங்களை வெகுதூரம் எடுத்துச் செல்லும். குருவுடன் சேர்ந்து நீங்களும் வளர்வீர்கள். குரு உங்களை உடைத்து வார்ப்பார். அவர் அறிவின் பிரக்ஞை  உங்கள் மீது மோதும் பொழுது ஏற்படும் வலி பயங்கரமாக இருக்கும். நாம் நம்மை இழப்பதை உணர்வோம்.  இந்த நிலையில் நாம் நம்மை தக்க வைத்துக் கொள்ள போராடுவோம். இழப்பு நமக்கே. கல்லூரியில் நம்மை உடைக்காதவர்; நமக்குப் புதிதாக எதுவும் தருவதில்லை. திரு. வைத்தியநாதன் சார் என் அகத்தை உடைத்தார். ஆழ்ந்த சாஸ்திரம் இல்லாத நிலையில் ஆசிரியர் ஒருவர் தன் மனதில் தற்செயலாகத் தோன்றும் எளிய கருத்துக்களை அறிய ஞானத்தின் திறப்புகளாக எண்ணி வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஞானத் துளிகள் வெளியில் வருவதற்கு ஆழ்ந்த சாஸ்திர பாடம் வேண்டும். இதற்கு பயிற்சி தேவை. நாம் அடைந்த அனுபவத்திலிருந்து பாடம் பெற்றுக் கொண்டால்தான் இந்த ஞான வெளிச்ச விளக்கவுரைகள் வெளியே வரும். 


· திரிதோஷம் என்பது ஒரு மருத்துவச் சொல்.
· ஒரு கலாச்சாரச் சொல்.
· ஒரு பண்பாட்டுச் சொல்.
· ஒரு யதார்த்தச் சொல்.
· ஒரு உயிரோட்டமுள்ள சொல்.
· ஒரு பிரக்ஞையை பிரதிபலிக்கின்ற சொல்.
· இது வேதங்களின் பிராணனை வெளிப்படுத்தும் சொல்.
· இது எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல.
· இது எவர் கட்டுப்பாட்டிலும் உள்ளதல்ல.

இது மண்ணில் உள்ள நதிகளைப் போல காடுகளைப் போல இங்கே பிறந்த அல்லது எந்த நாட்டிலும் பிறந்த அனைவருக்கும் சொந்தமானது. இது என்னுடையது என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

முன்பே கூறியபடி, திரிதோஷ அறிதல் அகவயமான ஒரு அறிதல், அதனால் உண்டாகும் ஒரு ஆற்றல் அகவயமானது. இது எல்லா பரிணாங்களையும் உள்ளடக்கியது.  சிகிச்சை என்ற ஒரு தளத்தின் மூலம் புறவயமாக அதனை நிரூபிக்க முடியும். அனைத்திலும் திரிதோஷத்தை காண இயலாதவர்கள், BP பார்க்க மறுப்பவர்களெல்லாம் இந்த மனநிலைக்குள் வர முடியாதவர்கள். ஒட்டு மொத்த திரிதோஷம் மற்றும் நவீனமும் கலந்த ஞானப் பரப்பு ஞான நிலை, ஒரு மோசடி அல்லது ஆயுர்வேதத்துக்கு விரோதமான செயல் என்று இவர்கள் சூளுரைக்க வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருப்பதும், நாம் பார்த்துக் கொண்டிருப்பதும் அதுவே. இதன் காரணம்; அவர்களுக்கு அனைத்தையும் திரிதோஷத்தில் உள்ளடக்கத் தெரியவில்லை. நமக்குத் தெரிகிறது.

திரிதோஷ கல்வி ஒரு தொழில் நுட்பம் மட்டுமே. இந்த தொழில் நுட்பத்தையே அறியாத இரண்டு மூன்று தலைமுறைகள் உருவாகி வந்தபின் அவர்களிடம் இதைப் பற்றி பேச வேண்டிய நிலைமையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். 

பாக்டீரியாவிலும், வைரஸிலும், புழுவிலும், பூச்சியிலும், மீனிலும், பறவையிலும், தேளிலும், பாம்பிலும், குதிரையிலும், யானையிலும், புலியிலும் திரிதோஷம் இருக்கிறது. வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்ற புரிதலை ஒரு ஆசான் ஏற்படுத்த வேண்டும்.

திரிதோஷத்துக்குரிய தெளிவியலை, நாமே முனைந்து ஆசானை அடைந்து பல படிகள் ஏறி, அகத்தில் தெளிவு பெற்று, மூட நம்பிக்கைகளை அழித்து மனப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு, மேலே சென்று, பயணத்தின் எல்லா படிகளையும் கடந்து, மெய்ஞானம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இது ஒரு தூய மெய்த் தேடலாக எந்தவித அடையாளமும் அற்றதாக அந்தரங்கமாகவே இருக்கிறது. எனது மாணவர் கூட்டம் இதை ஒரு நாள் பிரகடனப்படுத்தும்.

அதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறலாம்.

திரிதோஷ நிராகரிப்பது என்பது நவீன மருத்துவர்களால் இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இதை வெறும் புத்தகக் குறிப்பாக மட்டுமே பார்ப்பது முழமையற்றது. அப்படியே, தத்துவமில்லாமல் தூய உணர்வு எனக் கற்பனை செய்து கொண்டும் எதையும் கற்க, புரிய,  அறிய முயற்சிக்காமல் இருப்பதும் முழுமையற்றது.

திரிதோஷ கல்வியை படித்தததற்காக நம்மில் பலர் நவீனத்துடன் இணைந்து செயலாற்றாமையை ஒரு நிலைபாடாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தத்துவமற்ற உள்ளுணர்வு, வெளிக்கு சுயம்புவாகச் சென்றுவிட்டதாகப் பாவனையும் செய்வார்கள். அறியாமை என்ற முள் அவர்களிடம் உள்ளது. அதை ஆணவ முள் மறைக்கிறது. அதை வைத்துக் கொண்டு வெகு தூரம் செல்ல முடியாது. அவர்கள் செய்வது ஒரு தர்க்க வாதமே. அந்த முள்ளினால் குத்தப்பட்ட கால் பழுக்கலாம். நாளை நாம் நவீனத்தை நாடலாம். என்னால் அதை நாடும் பொழுது எனது தன்மையை இழக்காத முறையில் நாடமுடியும். இது அவர்களுக்கு புரிவதும் இல்லை, அவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வதும் இல்லை. விஞ்ஞானத்துடன் இணைதல் மூலமே ஒரு உச்சக்கட்ட சாத்தியம், மருத்துவத்தில் கோடிட்டு காட்டப்படுகிறது.

இந்த பூமியில் வாழும் எந்த மனிதனும் திரிதோஷ தர்சனம் இல்லாதவனாக இல்லை. இந்த உலகத்தில் பிறப்பு.  செயல்பாடு, அழிவு விடுத்து அவனுக்குள் ஒரு உருவகம் இருக்கும். உருவகம் இருந்தால்தான் சொந்த வாழ்க்கையை அவனால் வகுத்துக் கொள்ள முடியும்.  இதையே ஆயுர்வேதம் மஹாபிரக்ருதி என்கிறது. பிரக்ருதிக்குள்ளளேயே நாமெல்லாம் அடங்குகிறோம். இந்த அடக்கம் தூய அறிவையும் உட்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லாமே திரிதோஷம்தான். அப்படி இருக்கும் போது தனி நவீனம் எங்கே, சுத்த ஆயுர்வேதம் எங்கே?

திரிதோஷ ஞானம் என்பது ஒரு எல்லையை உயர் தெளிவையும், சிகிச்சையையும், தினச்சர்யையும்,ருதுச் சர்யையும், வேக அவரோதத்தையும், எடுத்துக் கொண்டு, தொடர்ச்சியாக ஒரு வைத்தியன் நிகழ்த்தும் ஒரு யக்ஞமே.

 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, இந்த யக்ஞம் பல வைத்தியர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. பலவிதமான இணைப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த திரிதோஷ யக்ஞத்தை செய்யாத வைத்தியர் யாரும் இல்லை. இந்த திரிதோஷத்தை தொட்டுப் பார்க்காத வைத்தியர் எவரும் இல்லை.  நவீனமோ, பழமையோ, அங்கு திரிதோஷம் இருக்கிறது என்பதும், திரிதோஷதிலிருந்து எந்த இந்திய தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும், இயைபியலையும் பிரிக்க முடியாது என்பதே உண்மை. அவ்வாறு சுத்த ஆயுர்வேதம் என்றுக் கூறி பிரித்தால் பூரண மெய்ஞான  தத்துவத்திலிருந்து நம்மை நாமே விலக்கிக் கொண்டு விடுகிறோம் என்பதே சத்தியம். இப்படி முடியாது என்பது புரிந்து  கொள்ள வேண்டும்.

அவ்வாறு புரிந்து கொள்ளாதவர்களுக்காக நாம் மெளனம் சாதிப்பதோ அல்லது ஒதுங்குவதோ தான் சிறந்த வழி. ஏனென்றால் அவர்கள் திருந்தப் போவதில்லை.

தெளிவுடன்,
மருத்துவர். இல. மகாதேவன்.




























சனி, 11 மே, 2013


மாண்புமிகு   தமிழக பள்ளிக் கல்வி விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்  முனைவர் திரு. வைகை செல்வன் அவர்களிடமிருந்து தமிழ்மருத்துவத்தில் (சித்தம், ஆயுர்வேதம்) சிறந்த நூலுக்கான நூலாசிரியர்   விருதினையும், சிறந்த பதிப்பகத்திற்குரிய விருதினையும் மருத்துவர். இல. மகாதேவன் பெறுகிறார். அருகில் முனைவர் கோ. விஜயராகவன் அவர்கள், இயக்குநர் உலக தமிழாராய்ச்சி நிறுவனம். முனைவர் மூ. இராஜாராம் இ.ஆ.ப. அவர்கள், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகியோர் உள்ளனர். நாள் - 25.04.2013 இடம் . உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. நூல் பெயர் - திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் (முக்குற்ற ஆராய்ச்சி நூல்)


சனி, 13 ஏப்ரல், 2013

சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு

தமிழ்நாடு அரசின் 2011 ம் ஆண்டுக்கான தமிழ் மருத்துவத்துவத்தின் (சித்தம் மற்றும் ஆயுர்வேதம்) சிறந்த நூலுக்கான பரிசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டாக்டர். மகாதேவன் எழுதிய திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் என்ற நூலுக்கு அறிவித்துள்ளது. அதனைப்பற்றிய 14.04.2013 தினமலர் பத்திரிக்கை செய்திக் குறிப்பினை காண்க.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013



இசை ஞானப் பேரரசு

நாகர்கள் கையாண்ட கருவியை நாதஸ்வரம் என்று கூறுவார்கள்.   திருச்சின்னம் என்னும் ஊதுகுழல் இன்றும் மடாலயங்களில் இருக்கிறது. இது ஒரு ஒலிக்கருவி. இறைவன் வருவதையும், மடாலயத் தலைவர்கள் வருவதையும் முன்னறிவிப்பதற்காக இதனை வாசிப்பார்கள். தமிழகத்தின் தொன்மையான இசைக்கருவிகளில் நாதஸ்வரத்துக்கும், தவிலுக்கும் பங்கு உண்டு. இறைவன்முன் நாள்தோறும் இது வாசிக்கப்படுவதால் இது மங்கள இசை எனும் பெயர்பெற்றது. திருச்சின்னம் போலவே நாத சின்னத்தை உருவாக்கினார்கள். நாதச் சின்னம் நாயனமாகியது. நாயனம் என்றும் இப்பொழுதும் அன்பாக அழைப்புதுண்டு. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பொன்னுசாமி நாயனக்காரர் சிவக்கொழுந்து நாயனக்காரர் என்றுதான் சிறப்பித்து அழைப்பார்கள். நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுடைய கதையைக் கேட்கும்போது சிவக்கொழந்து நாயனக்காரர் என்று குறிப்பிடுவதை நான் கேட்டுருக்கிறேன். பழைய புத்தகங்களில் சரம் என்று உள்ளது.

இசைக்கோவையைத் தொடுப்பதை ஒருக்கால் சரம் என்று சொல்லியிருக்கலாம். பிறகு அது சுரம் என்று மாறியிருக்கலாம். நாகசரம் பிற்காலத்தில் நாத சுரமாக மருவியிருக்கக் கூடும்.  வாழையடி வாழையாக நாதஸ்வர வித்வான்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இது குலத் தொழிலாகவும் இருந்திருக்கிறது. சின்ன மேளம், பெரிய மேளம் என்று முன்னால் சொல்வார்கள்.

“எழில் இயம்ப இயம்பும் வெண்சங்கும்” என்ற திருவாசக வார்த்தையை நாம் கேட்டிருக்கிறோம்.  “எழில்” ஏழ ஸ்வரத் துளைகள் உடைய நாதஸ்வரம். எழில் என்ற சொல் நாதஸ்வரத்தையேக் குறிக்கும் என்று நினைக்கிறேன்.

பாணர்கள் இசையுடன் தொடர்புடையவர்கள். பாணர் இயற்றிய துயில் எடை நிலை என்று தொல்காப்பியத்தில் ஒரு துறை வருகிறது. மன்னார்கள் அதிகாலையில் எழுந்து அன்றைய காரியங்களை படுக்கையில் இருந்தபடியே சிந்திப்பார்கள் என்று இதன் பொருள்.

நாதஸ்வர ஞானம் கர்நாடக சங்கீதத்திற்கு அடிப்படை. நாதஸ்வரம் இருந்தால்தான் திருமணம் களை கட்டுகிறது.  டிண்டிமம் என்று ஒரு வடமொழி சொல் உண்டு. இதை தவிலுடன் ஒப்பிடலாம். யாழ்ப்பாணத்தில் இதற்கு எமபேரி என்ற பெயர் உள்ளது. ஆகமங்களில் மட்டுகம் என்ற வார்த்தை காணப்படுகிறது. இனி விஷயத்துக்கு வருவோம். 

நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் வள்ளியூர். திருப்புகழில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலம்  வள்ளியைப் புணர்ந்த மணவாளா  என்பது அந்த பாடல். 
இந்த கட்டுரையின் கதாநாயகன் வள்ளியூர் ராசுக்குட்டி. வள்ளியூரில் வசித்து வருகிறார். வயது 60 இருக்கும். இவர் ஒரு நாதஸ்வர வித்வான். 

நமது கதாநாயகன் மற்ற நாதஸ்வரகாரர்களைவிட சிறப்பம்சம் வாய்ந்தவர். இவர் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றதில்லை. ஆனால் இன்று உலகளவில் இவருக்கு இணையாக சினிமா பாட்டு வாசிப்பதில் கைதேர்ந்தவர்  யாரும் இல்லை. வள்ளியூர் ராசுக்குட்டி என்று சொன்னால் அவருக்கென்று ஒரு பெயர், புகழ், மிக மெலிந்த தேகம். அவரது எடை 35 கிலோவுக்கு மேல் இருந்தால் அது ஆச்சரியம். சாமி சாமி என்று கனிந்து குழைந்து எப்பொழுதும் பேசுவார். அவருடன் எனக்கு சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அனுபவம். தவில் வித்வான் நாஞ்சில் மணிகண்டன் ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்தபொழுது டாக்டர், நீங்கள் ராசுக்குட்டி மேளம் கேட்டுருக்கிறீர்களா என்று கேட்டார் நான் இல்லை என்று சொன்னவுடன் மிகவும் ஆச்சர்யப்பட்டு வாழ்க்கையில் கேட்க வேண்டிய ஒரு மேளம், நீங்கள் கேட்காதது மிகப்பெரிய தவறு என்று சொல்லி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே ஈசாந்திமங்கலம் கோவிலில் கொடையில் நடந்த இரவு போட்டி மேளத்திற்கு என்னை அழைத்துச்  சென்றார் பொதுவாக நான் கொடை நடக்கும் கோவில்களுக்கு செல்வதில்லை. திரு. மணிகண்டனின் கட்டாயத்தாலும், அன்புக் கட்டளையை மீற முடியாததாலும் அன்று நான் ஈசாந்திமங்கலம் சென்றேன்.  அங்கு அன்பர் ராமதாஸும் வந்திருந்தார். நாஞ்சில் மணிகண்டன் எனக்கு சிறுவயதிலிருந்தே பழக்கம். மாதத்திற்கு ஒருமுறையாவது வீட்டுக்கு வருவார். சேர்ந்து நாதஸ்வரம் கேட்போம், தவில் சொற்களைப் பற்றி பேசுவோம். எனது உபநயனத்திற்கு மணிகண்டன் தவில் வாசித்தார். அப்போது எனக்கு வயது 10 இருக்கும். வள்ளியூர் ராசுக்குட்டியை அறிமுகம் செய்து வைத்தபோது மிகவும் அன்பாகப் பேசினார். என்னை நன்றாகத் தெரியும்  என்று கூறினார்.

“மன்னவன் வந்தானடி” என்ற பாடலை அவர் வாசித்தார். காருக்குறிச்சி தவிர வேறு யாருக்கும் தலைவணங்காத எனது தலை முதன்முதலாக அன்று அவருடைய வாசிப்புக்கு வணங்கியது. அப்படிப்பட்ட ஒரு வாசிப்பு. ஒப்பாரும், மிக்காரும் இலர், என்று சொல்லும்படியான வாசிப்பு. அதன்பிறகு “பல்லாண்டு வாழ்க, “அக்கரை சீமை அழகினிலே, போன்ற பாடல்களை மிகத் தத்ருபமாக வாசித்தார். இப்படியும் ஒருவர் வாசிக்க முடியுமா என்கின்ற அளவுக்கு வாசிப்பு இருந்தது. மெலிந்த உருவம், குள்ளமான உருவம். அப்படியே பின்னோக்கி வளைந்தார், நாதஸ்வரத்தை மெலே சுழற்றினார். இரண்டு பக்கமும் சுழற்றி சுழன்று சுழன்று பாம்பைப் போல் வளைந்து வாசித்தார். மருத்துவ ரீதியாக இதை  Lumbar flexion, extension, lateral bending, rotation  என்று குறிப்பிடுவோம். அத்தனை அசைவுகளுக்கும் அந்த தண்டுவடம் ஈடுகொடுத்தது. மிகப் பழைய நாதஸ்வரம். அதில் ராஜரத்தினம் பிள்ளையுடைய படமும், காருக்குறிச்சியார் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. 

நீண்ட தேடுதலுக்குப் பிறகு காருக்குறிச்சியின் மகளின் நட்பு எனக்குக் கிடைத்தது. அந்த அம்மா பழனியில் இருந்தார்.  ஒருமுறை காருக்குறிச்சியார், விழாவை பழனியில் நடத்தி திருநெல்வேலி திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நாதஸ்வரம் பரிசாக அளித்தோம். தூரதிர்ஷ்டவசமாக அந்த அம்மா இறந்து விட்டார்கள். காருக்குறிச்சியின் வாசிப்பை சொல்ல வேண்டுமென்றால் அதில் ஒரு சுகம். மினர்வா தியேட்டரில் காருக்குறிச்சி வாசித்த நடபைரவி ஒலிப்பேழையில் நான் கேட்டிருக்கிறேன். நடபைரவி என்றால் அதுதான் நடபைரவி. பெரிய பெரிய நாதஸ்வர வித்வான்கள் ராசுக்குட்டியின் பாட்டை விரும்பி கேட்பார்கள். எந்த பாட்டைக் கேட்டாலும் ராசுக்குட்டி அதை அப்படியே வாசித்து விடுவார். ஸ்ருதியே போகாது. குழல் தேனினும் இனிமையாக இருக்கும். ஒருமுறை சிவானந்த ஆசிரமத்திற்கு வெளிநாட்டினர் முன்பாக வாசிப்பதற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் ஏதோ ஒரு டியூனைக் கூறினார்கள். அதனைக் கேட்டு உடனே அப்படியே வாசித்து விட்டார். அவர்கள் அந்த ஞானத்தைக் கண்டு மெய்மறந்து போனார்கள். தொடர்ந்து ராசுக்குட்டியின் இசையை நான் கேட்டு வந்தேன். அவரை வைத்து ஒரு சிடி வெளியிட்டு அன்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வந்தேன். என்ன என்ன ராகங்கள் எனக்கு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும்.

கீரவாணி, ஸ்ரீ ரஞ்சனி, காபி, சிந்துபைரவி, போன்ற பாடல்கள் நான் விரும்பி கேட்பேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை வடசேரிக்கு அவரது கச்சேரிக்கு நான் சென்றிருந்தேன். கல்யாண வசந்தத்தை அவர் மிக அற்புதமாக ஆலாபனை செய்தார். கண்களிலிலிருந்து கண்ணீர் வந்தது. ஒரு நாட்டுப்புறக் கலைஞருக்கு இது சாத்தியமே இல்லை. அதை முடித்து விட்டு “காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்” என்ற பாட்டு வாசித்து அதில் சுரம் வாசித்தார். இதனைக் கேட்டு நான் வேறு உலகத்தில்  சஞ்சரித்தென் என்று சொன்னால் அது மிகையாகாது. 

ராசுக்குட்டிக்கு தீர்த்தபானம் செய்யும் பழக்கம் உண்டு. அவருக்குப் பின்னால் ஒரு பையன் எதுவும் பேசாமல் இருப்பான். ஒரு சொம்பை கையில் வைத்துக் கொண்டு இருப்பான். அதிலிருந்து பிரஸாதத்தை அழக்கடிக்  கொடுத்துக் கொண்டே இருப்பான். மருந்து சாப்பிடும் பழக்கமும் ராசுக்குட்டிக்கு உண்டு. இவ்வளவு பழக்கங்களும் இருக்கிறதே என்று சொல்லி ராசுக்குட்டியை ஒரு நாள் வரவழைத்து அனைத்து இரத்தப் பரிசோதனைகளும் செய்தேன். எல்லாமே சீராக இருந்தது. இது ஆச்சரியத்தின் உச்சக்கட்டம். 

ஒருமுறை எங்கள் ஊர் ஸ்ரீ தரநங்கையம்மன் காளிபவூட்டு விழாவில் ராசுக்குட்டி வாசிக்க ஏற்பாடு செய்திருந்தேன். வருகின்ற வழியில் மருந்தின் தன்மை காரணமாக ஒரு ஓடையில் விழந்து  Maxillary bone உடைந்து விட்டது. சற்று நேரத்திற்கு ஒரு மருத்துவமனையில் படுக்க வைத்திருந்தேன்.  மனோ தைரியத்தில் வந்து இரண்டு பாட்டு வாசித்துவிட்டார். மறுநாள் காலை கிருஷ்ணகுமார் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு மாதம் கழிந்து மீண்டும் புத்துயிர் பெற்று இன்றும் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

எத்தனையோ வித்வான்கள் இருக்கிறார்கள். எத்தனையோ பேருக்கு விருது கிடைக்கிறது. வள்ளியூர் ராசுக்குட்டிக்குத் தேவையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பெரிதாக அவர் எதுவும் சம்பாதிக்கவும் வில்லை. இதுதான் விதி. தலையெழுத்து என்று சொல்வதைத் தவிர வெறொன்றும் இல்லை.  இவருடைய பாட்டு கேட்பதற்காகவே ஒரு கூட்டம் வரும். 

நாதஸ்வர கலைஞர்கள் பல சந்தர்ப்பங்களில் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தவில்காரர்களை சிறுவர்கள் கூட மேளக்காரன் போறான் என்று சொல்கின்ற நிலை இருந்திருக்கிறது. 
இவர் எந்த வழி பொழிகிறாரோ அந்த வழி நாயனம் வரும். நாயனம் போகின்ற வழி அவர் வருவார். இப்படி ஒரு மனப்பொருத்தம். ஒற்றுமை அலாதி. துளைகளை அடைப்பதும் பிடுங்கி எடுப்பதுமாக விரல்களுக்கு ஓய்வே கிடையாது. 

இவருக்கு ஒரு சில கீர்த்தனைகளும் தெரியும். இவர் சீவாளியை நாதஸ்வரத்தில் பொருத்தி ஸ்ருதி சேர்த்த உடனேயே பாட்டுக்கள்  கொட்ட ஆரம்பித்துவிடும். இவர் யாரைக் கண்டும் பயந்ததில்லை. எந்தப் பாட்டையும் வாசித்து விடுவார். புதுப்பாட்டு சிடியைக் கேட்டால் உடனேஅதை வாசித்து விடுவார். இவர் சாதகம் செய்வது பற்றி எனக்குத் தெரியாது. சாதகமே தேவையில்லை. அது முற்பிறவியின் உழைப்பாலோ, புண்ணியத்தாலோ அவசியமின்றி கைதேர்ந்ததாகிவிட்டது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால் அதனை அப்படியே வாசித்து விடுவார். நீண்ட நேர பிருகாக்களை அவரால் பொழிய முடியும். அது மிகப் பெரும் திறமையாகும். இந்த இசையில் கட்டுண்ட நாகம்போல், சிலைபொல் மயங்கி நின்ற பாமரர்களை நான் கண்டிருக்கிறேன். தேன்மழை பொழிவது என்பது இதுதான் என்றுமே நடக்கும் விஷயம்.

நாதஸ்வரத்திற்கென்றே சில வாசிப்பு முறைகள் உண்டு.  துத்துக்காரம், தன்னக்காரம், அகாரம், பிருகா, விரலடி போன்றவை.

காருக்குறிச்சிக்குப் பின்பு விரலடி வாசிப்பதில் இவர் திறமைசாலி. ராக ஆலாபனையிலும் இவர் வல்லவர்.  பல்லவி போன்றவற்றை இவர் கையாள்வதில்லை. மேல்காலத்தில் வாசிப்பதில் ஞானம். இவரது வாசிப்பைக் கேட்க சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து வந்து கூடுகிறார்கள். வள்ளியூரில் பிராமணர்கள் கொடை நடத்துவார்கள். அதில் இவர் வாசிப்பதைக் கேட்பதற்கு ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் கேட்க வருவார்கள். விடிய விடிய வாசிப்பார். 8 முதல் 9 மணி நேரம் வரை வாசிப்பார். அந்த சமயத்தில் அசுரனாகிவிடுவார். இவ்வளவு இருந்தும் இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்றும் வள்ளியூர் சென்றால் கோவிலுக்கு முன்னே சிறு துண்டைக் கட்டிக் கொண்டு ஒரு நாய்க்குட்டியை கையில் பிடித்துக் கொண்டு இவர் உலா வருவதைக் காணலாம். ஒரு அழுக்குத் துணியில் இவருடைய நாதஸ்வரம் வீட்டுக்குள் இருக்கும். அடுத்த கச்சேரிக்கு தேதி குறிப்பிடப்படாமல் இருக்கும். இதுதான் இந்த மஹா ஞானியான வித்வானின் கதை, மக்கள் அவருக்குக் கொடுத்த அங்கீகாரம். 

வியாழன், 3 ஜனவரி, 2013

மீண்டும் ஒரு புது வருடம்


மீண்டும் ஒரு புது வருடம் !!!
மனித கற்பனையில் உருவான டிசம்பர்  31 ம் ஜனவரி 1 ம்
மஹா  மாயையின் உண்மை நிலை

இறைவனின் திரு நாமங்களின் பெயரிலும், அளப்பரிய அருளாற்றலின் பெயரிலும்  இத்தருணத்தில் எனது நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றொரு வருடம் கடந்து போயிற்று.
காலம் தன்னுடைய வேகத்தால்
அனைத்தையும் இழுத்துச்  சென்று விட்டது.
நம் மனதின் நினைவலைகளைத் தவிர !
பழமையின் எந்த சுவடுகளும் இன்று இல்லை.
பழமையின் நினைவு என்பதும்
நாம் உருவாக்கிய ஒரு கற்பனையே !
பழமை சார்ந்த நிகழ்வுகள் எதுவும் இன்று, இப்பெழுது நம்மிடத்தில் இல்லை.
நம் மன எண்ணங்களைத் தவிர !
பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி,  துக்கம் நோய், நலம்,
விருப்பு, வெறுப்பு, கோபம், நிதானம் என இருமையின்
பரிணாமங்கள்  பலவையும் கடந்து போயின
வலிமையான இந்த தருணமே, பழமையின் கூடாரமாகவும்,
எதிர்காலத்தை நிச்சயிக்கும் சக்தியாகவும் விளங்குகிறது.
எனவே இந்த தருணத்தில் வாழ்வது
ஒரு பூரணமான வாழ்க்கையாகும்.
பழைய நினைவின் சிந்தனைகள் நம்மை
இறக்க வைக்கின்றன.
இனிவரும் எதிர்காலத்தின் சிந்தனையில் இருக்கும் பொழுது
நாம் பிறக்கவேயில்லை.
இதோ இந்த தருணமே அனைத்து புதுமைகளின் ஆரம்பம்.
இனிவரும் வருடத்தில் புதிய விஷயம்தான் என்ன?
 அதே நாட்கள், அதே மாதங்கள்,
அதே நாட்காட்டி குறிப்புகள், மாறாத அதே மனிதர்கள்,
அதே அச்சுறுத்தும் புறச்சூழல்,
எல்லாமே அதேபோல் உள்ளன.
இது எவ்வளவு பெரிய மாயை ?
இதைத்தான் நாம் கொண்டாட விரும்புகிறோம்.
நம்மை உணர்ந்து தன்னிலையறிந்து நிலைப்பதே
உண்மையான புதுவருட பிறப்பாகும் !
மகிழ்ச்சியாகும் ! கொண்டாட்டமாகும் ! மாற்றத்தைக் காணும்
மாறாத அகச் சூழலின்
இந்த உணர்வுக்கு மாற்றம்தான் ஏது ?

மரு. இல. மஹாதேவன்