திங்கள், 29 செப்டம்பர், 2014

Rama Sarma - என்று நான் காண்பேன் இனி

என்று நான் காண்பேன் இனி
          “I am Rama Sarma”  என்று பொலிவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் எனது பெரியப்பா அன்பிற்குரிய சிவத்திரு. ராம சர்மா அவர்கள் 18.9.2014 அன்று இறையடி அடைந்தார்கள் என்ற செய்தியைக கேட்டு சொல்லணா துயரம் அடைந்தேன்.
          அதிகாலை 6 மணியளவில் எனது தாயார் ‘மகாதேவா’ என்று அலறியதைக் கேட்டு எனது அப்பாவுக்குத்தான் ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சி கீழே வந்தபொழுது இந்த அதிர்ச்சி செய்தியானது சென்னையில் இருந்து வந்திருந்தது. திரு. ராம சர்மாவிற்கு இறக்கும்பொழுது வயது 74. அவரும், எனது அப்பாவும் இரட்டைக் குழந்தைகள்.
          Fraternal twins என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு ஒரே போல் இருக்க மாட்டார்கள். குணாதிசயங்களும் சற்றே வேறுபட்டுத்தான் இருக்கும். எனது தகப்பனாருக்கும் சரி, பெரியப்பாவிற்கும் சரி ஒருவருக்கொருவர் இடையில் அன்பும், பாசமும் உள்ளுணர்வும் மிகுந்திருந்தது. அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டதை அபூர்வமாகவே நான் பார்த்திருக்கிறேன்.
          திரு. ராம சர்மா அவர்கள் ஒரு எளிமையான மனிதர். வாழ்க்கையில் அத்யயனம் (படித்தல்), அத்யாபனம் (படிப்பித்தல்), ஸத்வித்யா சம்பாஷணம் (படித்தவர்களுடன் உரையாடுதல்) என்று சரகர் கூறும் மூன்று விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர். இவற்றை அவர் சந்தோஷத்துடன் செய்து கொண்டிருந்தார். இறுதி மூச்சு வரை அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மரணப் படுக்கையில் பீஷ்மரைப் போல அவரை கிடத்துக்கின்ற பொழுது அவரை சுற்றி மாணவர் கூட்டமே அதிகமாக இருந்தது. ஒரோர் மாணவரின் இருதயக் கூட்டை அவர் தன் பாடத் திறமையினாலும், அன்பினாலும் ஆட்கொண்டிருந்தார் என்பதை என்னால் உணர முடிந்தது. எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்லுவார். ஒரு சாக்கை விரித்து அதிலேயே படுத்துத்  தூங்கி விடுவார். சாப்பாட்டில் கூட இது தான் வேண்டும், அது தான் வேண்டும் என்று கிடையாது. எது கிடைத்ததோ அதையே சாப்பிடுவார். ஹோட்டலில் போய் சாப்பிடுகின்ற பழக்கம் கிடையாது. இல்லையென்றால் 4 வாழைப் பழங்களை சாப்பிட்டுவிட்டு தண்ணீரை குடித்து விடுவார். வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களிலேயே அவருக்கு சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு போன்றவை வந்தன. ஆரம்ப காலத்தில் புகையிலைப் பழக்கம் சற்று இருந்தது. ஆதலால் பக்கவாத நோய் வந்து பேச்சு தடைபட்டது. ஆனால் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். நமக்கு ஒரு நோய் வந்துவிட்டதே, மீண்டும் வந்துவிடக் கூடாதே என்ற எண்ணமோ, பயமோ நான் அவரிடம் கண்டதில்லை. Dr. டைனி நாயரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் கூறுகின்ற விஷயங்களைக் கேட்டு அப்படியே செய்வார். இரண்டு தினங்களுக்கு முன்புதான் எனது பெரியப்பாவுக்கும் பெரியம்மா திருமதி. ஜெயலெட்சுமிக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் பூர்த்தியாகி இருந்தது. 50 வருட திருமண வாழ்க்கை என்பது ஸனாதன தர்மத்தில் ஒரு ஆன்மீக சாதனை என்றே குறிப்பிடலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களை வாழ்க்கையின் இலட்சியமாக வகுத்துக் கொண்ட ஒரு புருஷன் வானப்ரஸ்தாஸ்ரமத்தில் சென்று வாழ்க்கையின் இறுதியை அடைய காலடி எடுத்து வைக்கும் சமயம் இது.
இவர் பழகுவதற்கு எளிமையானவர். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருடைய மூத்த மகனுக்கும் என்னுடைய பெயர்தான் - மகாதேவன்.
          பெரியப்பாவின் இசையறிவு ஒப்பில்லாதது. நோக்கறிய  நோக்கே, நுணுக்கறிய நுண்ணறிவே என்று நாம் சொல்வோமே அதைப்போல் இசையில் நுணுக்கங்களை ஆழ்ந்து அறிந்தவர் அபரிமிதமான இசைஞானம் உடையவர். இசையின் தொழில் நுட்பங்களை நன்றாக அறிந்திருந்தார். அவர் இருக்கும் பொழுது இசையைப் பற்றி நான் அதிகமாக பேசியதில்லை ஏனென்றால் நம்முடைய அறியாமை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மதுரை சோமு, காருக்குறிச்சி அருணாச்சலம், G. N. பாலசுப்பிரமணியம், T. N. ராஜரத்னம்பிள்ளை, T. N.  சேஷகோபாலன்,  D.K. ஜெயராமன் போன்றவர்களின் பாடல்களை இவர் மிகவும் ரசித்துக் கேட்பார். யாராவது வர்ணம் பாடவில்லை என்றால் அவருக்கு பிடிக்காது. கோபம் வரும் என்று கூட சொல்லலாம். சிறு வயதில் எனக்கும், அவருக்கும் இதில் சண்டையே வந்திருக்கிறது. இசையின் நுட்பத்தை அறிந்தவர். 
எனக்கு சிறு வயதில் படிப்பு அதிகம் வந்ததில்லை. நான் மருத்துவத்தில் சேர்ந்து வைத்தியநாதன் ஐயாவை கண்டு பாடம் படிக்க துவங்கிய பொழுதுதான் மறுபிறவி எடுத்தேன் என்று சொல்லலாம். வைத்தியநாதன் ஐயா அவர்கள் எனக்கு ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், காரண சரீரம், உபதா போன்றவற்றை எல்லாம் கோடிட்டு காட்டி இருந்தார். அவருடைய மரணம் என்னை உலுக்கியது. அவர் இறப்பதற்கு முந்தைய நாள் இன்னும் சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். இந்த சரீரம் கட்டையில் வேகுவதற்கு முன் அது முடியவில்லையே என்று சொன்னதாக மாமி என்னிடம் கூறினார்கள். இது போன்ற விஷயங்கள் எனது வாழ்வில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எனக்கும் மாணவர்களுக்கு கல்வி போதிக்கின்ற வெறி மிக அதிகம் உள்ளது. இது பெரியப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது என்று திடமாக நம்புகிறேன். இதற்கு வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.
மருமகன்கள் (தன் அக்கா மகன்கள்) பேரில் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
Dr. . மகாதேவன், Dr. சிதம்பரம் போன்றவர்கள் எல்லாம் இன்று கதறி அழுதபொழுது ஒரு மனிதன் பிறக்கும்போது என்ன செய்கிறான், வாழும் பொழுது என்ன செய்கிறான் என்பதன் பலனை அவன் இறந்தபோது உறவினர்கள் கதறி அழும் பொழுது உணரலாம் என்று உணர்ந்தேன். சிறு வயதில் இவர்கள் தன் தாயை இழந்தார்கள். எனது தாய் இளம் வயதில் திருமணமாகி மகாதேவ ஐயர் குடும்பத்திற்கு வந்த பொழுது இவர்களை மிகவும் நேசித்து வளர்த்தார். அன்று அந்த குடும்பம் மிகப் பெரிய குடும்பமாக இருந்தது. நான் சந்தித்த அனைவருமே அவரைப் பற்றி நல்ல வார்த்தைகளைத் தான் பேசினார்கள். சிறுவயதில் நான் எனது பெரியப்பாவிடமோ, பெரியம்மாவிடமோ, அவர்களுடைய குழந்தைகளிடமோ அதாவது எனது சகோதர சகோதரியிடமோ நெருங்கி ஒட்டியிருக்கவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குடும்பத்தின் இன்றியமையாமை மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ளுதல் எவ்வளவு தேவை என்பதை எனது பெரியப்பாவின் உடலின் அருகில் இருக்கும் பொழுது எனது ஆழ்மனதில் அசைப் போட்டேன் என்பது சத்தியம். மனம் விட்டு விஷயங்களை நாம் பேச வேண்டும், காலத்தில் செய்ய வேண்டியதை காலத்தில் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் வெளிப்படையானத் தன்மை இருக்க வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுது அவருடன் சென்று இருக்க வேண்டும். அவர் இறந்த பிறகு அழுவது, படம் வைத்து மாலை போடுவது அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். இனிப்பு சுவையைப் பற்றி ஒரு ஸ்லோகம் எழுதலாம் ஆனால் இனிப்பை வாயில் போட்டுக் கொள்வது போல இருக்குமா என்பதை நான் இந்த இடத்தில் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
வாழ்க்கையில் நமக்கு ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் மனதில் ஒரு பிம்பம் தோன்றி விடுகிறது. இந்த பிம்பமாகிய எண்ண அலைகளை உடைத்து வெளி வருவதற்கு சுய புத்தி தேவைப்படுகிறது. சுய புத்தி வெளிப்படும் பொழுது காலம் கடந்து விடுகிறது. அவர்களை நாம் இழந்து விடுகிறோம். நகரத்தில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் இருக்கிறதோ என்னவோ? கிராமங்களில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. 
மனம் மலர வேண்டும் என்று ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எப்பொழுதுமே சொல்வார்கள். எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனம் என்று பேசுவார்கள். எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனத்தினால் தான் நல்லவற்றை மட்டும் பார்த்து மேற்கொண்டு முன்னேற முடியும். எனக்கு மனஅழுத்த நோய் என்று தெரிந்தவுடன் நான் அதை பழிக்கவில்லை, இழிக்கவில்லை. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும், மருந்து சாப்பிட்டு நான் சரியாக வேண்டும் என்று சொன்னேன். அதனால் தான் எனக்கு பல வளர்ச்சிகள் கிடைத்தது.
ஆதலால் அன்பானவர்களே உயிரோடு இருக்கும் பொழுதே  உறவினர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உணவு கொடுங்கள், மருந்து கொடுங்கள். உயிர் போனபிறகு படத்தை மாட்டி மாலையிட்டு வைப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் எத்தனையோ சாஸ்திரங்களை படித்த எனக்கு உயிர் போன பிறகு என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாது. இதுவே சத்தியம். ஆனால் புத்தர் சொல்வது போல இந்த வாழ்க்கை சத்தியம். பாக்கி எல்லாமே மித்யை. நமக்கு மித்யை தேவையில்லை, மித்யையில் இருந்து விடுபடுவோம். அதற்கு அன்னை அபிராமி அருள்புரிவாளாக.
எனக்கு தமிழில் மிகுந்த பற்று அதிகம். ஒரு தமிழர் வீட்டில் மரணம் ஏற்பட்டால் நாம் படிக்க வேண்டியது திருவாசகம், பட்டினத்தாரின் மெய்ஞான புலம்பல், பாரதியார் பாடல்கள். கல்லும் கரையும் மாணிக்கவாசகரின் பாடல்கள் அவ்வாறு உள்ளன. பாரதியார் பாடல்களின் சில பகுதிகளில் சித்தரெல்லாம் முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார் என்று எழுதியுள்ளார்.
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
என்கிறார். எந்த ஒரு மனநிலை இருந்தால் இப்படி ஒரு தமிழன் எழுதியிருக்க வேண்டும்.
மரணத்தை கண்டு வெதும்பி மெய்ஞானம் பெற்று சிவனடியை அடைந்தவர்கள் பட்டினத்தடிகள். ஓம்காரானந்த ஸ்வாமிகள் ஒரு முறை என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது மனதின் கசடுகளை வெளியே கொண்டு வந்து விருத்தியாக்குவது பட்டினத்தடிகள் பாடல்களே என்றார். உடனே நானும் அந்த புத்தகத்தை வாங்க¤ பாடம் செய்து கொண்டிருக்கிறேன். 
கீழ்க்கண்ட பாரதியின் பாடல்களை படியுங்கள். அதுவே இவை அனைத்திற்கும் விடை.
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்
பொந்திலே யுள்ளாராம் வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின்றாராம்
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே
நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை,
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பது நம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தால் எமக்கென் னென்றே
வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!
---------------x---------------

திங்கள், 4 நவம்பர், 2013

திலீப் எனும் நண்பன்
ஒரு கண்ணீர் அஞ்சலி

அழிவினவை நீக்கி யாறுய்த் தழிவின்க
மூல்ல லுழப்பதா நட்பு
குற - 787

அன்றொரு நாள் காலை பொழுது மணி 9 இருக்கும். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். பொதுவாக ஆயுர்வேதத்தை பேசுகின்ற எனக்கு சமீப காலமாக காலையில் எழும்புவதோ தினசர்யையை எனது வாழ்க்கையில் கடைபிடிப்பதோ கடினமானதாக இருக்கிறது. ஒயாமல் எனது கைபேசி ஒலித்து கொண்டிருந்தது. தூக்க மாத்திரையை சாப்பிட்ட நான் எனது கைபேசியை தேடினேன். கைபேசி இருக்கும் இடம் தெரியவில்லை. மனதில் இந்த கைபேசியை அணைத்துவிட்டு அதிகமாக ஒரு மணி நேரம் தூங்கலாம் என்ற எண்ணம் இருந்தது. எனக்கு தெரிந்த இடங்களில் கையை விட்டு துலாவிப் பார்த்த பொழுது கைபேசி கிடைக்கவில்லை. மணி 9.45 க்கு ஜீவா வந்து என்னை எழுப்பினான். அநேக நாட்களில் அவன் இவ்வாறு செய்வதுண்டு. எழுந்ததும் வந்ததும் வராததுமாக நெஞ்சைப் பதற வைக்கின்ற ஒரு நிகழ்வை அவன் கூறினான். உங்களது நண்பர் திலீப் என்ற ராஜரத்னம் நேற்று இரவு விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை அவன் சொல்லிவிட்டு பெரிய பெட்ஷீட்டை மடித்து வைக்க தொடங்கினான். அவனுக்கு அது சஞ்சலமில்லாத ஒரு செயலாக இருந்திருக்கும். நிறைய நோயாளிகளைப் பார்த்த உடல்வலி, இயற்கையாகவே மனதைத் தாக்கி இருக்கின்ற விசாதம் இவற்றுடன் எழுந்து அமர்ந்தேன். இவற்றுடன் எப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது என்று கேட்ட பொழுது சஜுக்கு போன் வந்தது. சஜு உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார், நீங்கள் போனை எடுக்கவில்லை என்று கூறினான்.  சஜுக்கு சிவகுமார் தகவல் அனுப்பியதாக நான் தெரிந்து கொண்டேன். YMCIA ஹாஸ்டலில் என்னுடன் தங்கியிருந்த ஹோட்டல் சிவகுமார் என்று நான் நினைத்தேன். இது அன்புடன் நான் சிவபழம் என்று அழைக்கின்ற YMCIA -ல் அதிகாலையில் எங்களையெல்லாம் விழித்து எழச் செய்கின்ற சிவகுமார் என்று பின்னால் அறிந்து கொண்டேன். உடனடியாக காலைக் கடனை அவசர அவசரமாக முடித்து விட்டு கீழே வந்து அமர்ந்தேன். பரபரப்பாக மனது இருந்தது. இந்த நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்பதற்கான பதிலும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நான் திலீப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது அவர் வேலையில் இருந்த காரணத்தினால் எனது அழைப்பை ஏற்கவில்லை. திருப்பி அவர் பலமுறை கூப்பிட்ட பொழுது என்னுடைய மனோத் தன்மை காரணமாக நான் பின்பு பேசுகிறேன் என்று கூறிவிட்டேன். அவர் உடனே என்னுடைய மனைவி சாரதாவை கூப்பிட்டு பேசி என்னுடைய மனஅழுத்தங்களும், பிரச்சனைகளும் எல்லாம் மாறும் என்றும் நான் கூட இருக்கிறேன் என்றும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளித்ததாக சொன்னாள். அப்பொழுதும் நான் திலீப்பை அழைத்துப் பேசவில்லை இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் சுமார் 25 வருடங்களுக்கு முன் சென்னை ராயபேட்டையில் உள்ள YMCA விடுதியில் நாங்கள் சந்தித்தது, விளையாடியது, சினிமாவுக்கு சென்றது, சாப்பிட்டது, ஒரே அறையில் தங்கி தூங்கியது போன்றவையெல்லாம் நிழல்படம் போவது போல் பசுமரத்தாணிப் போல நினைவில் வந்தது. நீண்ட உயரம், தீர்க்கமான தரிசனம், பொய் சொல்லாத ஒரு உயிர். நேர்மை, உண்மை, அஞ்சாமை, புறம் கூறாமை, சினம் கொள்ளாமை, உள்ளதை உள்ளவாறு கூறுதல், பிறருடைய இயலாமையை ஏற்றுக் கொள்ளுதல், தற்புகழ்ச்சி இல்லாமை போன்றவற்றில் எல்லாம் தன் நிகரற்றவராக அவர் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. M.Com, ICWAI, ACS 
என்ற உயர்ந்த படிப்புகளையெல்லாம் சர்வ லகுவாக எந்தவித கடினமும் இன்றி கற்று தேர்ந்தார். சரஸ்வதி கடாட்சம் பரிபூரணமாக அவருக்கு இருந்தது. 


இப்பேர்ப்பட்ட மனிதர் இன்று நம்முடன் இல்லை. அந்த ஆஜானபாகுவான உருவம், வெள்ளை சிவப்பு நிறம் கலந்த உடம்பு, சிரித்துப் பேசும் தன்மை, தட்டிக் கொடுக்கும் மனோபாவம், இத்தகைய மனிதரை இனி ஸ்தூல சரீரத்தில் நம்மால் காண இயலாது. காலம் என்கின்ற மகா மாயை பல சந்தர்ப்பங்களிலும் கொடூரமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பல பெரியவர்கள் கலியில் கோரமான மரணத்தை கண்டிருக்கிறார்கள். அகால ம்ருத்யூ, அப ம்ருத்யூவே அவர்களை வாட்டி இருக்கிறது. பல அயோக்கியர்களும், அரசியல்வாதிகளும் கொழுப்பேறி வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற காலத்தில் நல்லவர்கள், விபத்துகளிலும், புற்று போன்ற நோய்களிலும் இறப்பதை நாம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 
பிறப்பதும், இறப்பதும் இயற்கை நிலை. முதலில் தோன்றுகின்ற உருவத் தோற்றங்கள் சிலக் காலம் நிலவி மருவிப் போகின்றன. அவ்வாறு மறைதலை நாம் இறப்பு என்கின்றோம். இது விழிப்பும், உறக்கமும் போன்றது. 

“உறங்குவதும் போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பதும் போலும் பிறப்பு“
என்கிறது குறள் 339

பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது
மணிமேகலை 16 

சாவதும் ஒருவகை உறக்கம். இவ்வாறு பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வருகின்றன என்பதை சிவஞான சித்தியார், சீவக சிந்தாமணி, இராமாயணம், பாரதம் பிரபுலிங்க லீலை, சேதுபுராணம் போன்றவை விளக்குகின்றன. 
பிறந்த ஒரோர் மனிதனும் வளர்ந்து வருகிறான் ஆனால் அவ்வளர்ச்சி சாவை நோக்கியே நடந்து வருகிறது. ஆயுள் ஒரோர் நிமிடமும் தேய்ந்து வருகிறது. நிலையாமையே நிலையானது. மரணம் உயிர்வாழ்வின் முன்னறிப்பாக உள்ளது என்கிறார் புக்கர். நல்ல சிந்தனையோடு புனிதமாய் வாழ்கின்றவனுக்கு இன்மையும், மறுமையும் இல்லை. எனது திலீப்பும் அவ்வாறே வாழ்ந்தவர் இதற்கு யாரிடமிருந்தும் சான்றிதழ் தேவை இல்லை.
வையக வாழ்வை விட வானக வாழ்வு அவருக்கு மேன்மையாய் அமையும். இதுவும் திண்ணம். இதில் சந்தேகமும் இல்லை. சிவ ஒளி அவர்பால் மேவி நிற்கும் அதில் அவர் உயிர் மிளிரும் அதற்கும் சந்தேகம் இல்லை. மரணத்திற்கு அவர் அஞ்சியது இல்லை இது உயிரோடு கலந்த எனக்கு தெரியும். வாழ்வில் அவர் சந்திக்காத கஷ்டங்கள் இல்லை. கஷ்டம் இப்பொழுது நமக்குதான். மனம், மொழி, மெய்யில் அவர் புனிதமாய் இருந்தார். புண்ணியம் செய்த ஆத்மா அவர். உடல் நிலையற்றது என்பதை அவர் அன்றே அறிந்திருந்தார். அந்த எண்ண தோற்றங்களை பல சந்தர்ப்பங்களில் என்னுடன் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு அச்சம் இல்லை. அச்சம் கொச்சையாக இருந்தது. அவர் வாழ்வில் சந்தித்த சவால்கள் எண்ணற்றன. விவேகமற்ற செயல்களை அவர் செய்ததில்லை. ஊழிப்படி செயல்கள் நடந்தது. அது முடிந்துவிட்டது. அது இயற்கை நியதி அந்த இயல்பை அவர் உணர்ந்திருந்தார். கீதையும் இதையே பேசுகிறது. அவர் எடுத்தப் பிறவியில் நல்லதையே செய்திருக்கிறார். பாக்கியவனாக சிறந்து விளங்கினார். பிறருடைய உள்ளத்தை கவர்ந்தார். மனிதரில் மேன்மையானவனாக இருந்தார். 
இறப்பு ஒருநாளும் அவர் நினைவுகளை அழிக்காது. புல்லின் நுனியில் உள்ள பனித்துளிப் போல் அவர் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆதி சங்கரர் குறுகிய காலமே வாழ்ந்தார் குறுகிய காலமே வாழ்ந்தார். மகாகவ¤ சுப்பிரமணிய பாரதியார் குறுகிய காலமே வாழ்ந்தார், காருக்குறிச்சி அருணாச்சலம் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் இன்றும் அவர்களைப் பற்றி பேசுகிறோம். நாம் திலீப்பின் நற்குணங்களைப் பற்றி என்றும் பேசுவோம். எங்கெங்கு நற்குணங்களும், நட்பும் பிரிக்காத முடியாமல் இருக்கின்றதோ அங்கு திலீப் இருப்பார். 20 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். அவர் நித்திய முக்தனாகவே திகழுவார். அவர் நம்மைப் பொறுத்த வரை ஒரு ஞான வீரன். வானுலகில் உய்த்து வாழ்கிறார். யாருக்கும் அவர் பயப்படவில்லை, இவரை கண்டு பிறர் பயந்தனர். என்னைப் பொறுத்த வரை அவர் ஒரு மகான். இன்றும் அழியாத பேருலக கதவுத் திறக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கிறார். மதி நலம் மிக்க மனிதப் பிறப்பை அவர் வாழ்ந்தார். வாழ்வில் பொன்னான காலம் வீணாகியது. வேலைக்கு போகவில்லை, பொருள் ஈட்டவில்லை, குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் அவருக்காக வாழவில்லை, பிறருக்காக வாழ்ந்தார், இறுதியில் குறிக்கோளோடு வாழ்ந்தவர். இறுதி நிலையில் நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னிடம் கூறினார். கூரிய அறிவும், சீரிய கருத்தும், சிறந்த குறிக்கோளும் அவர் வாழ்க்கையை மகிமைப்படுத்தி வந்தன. கூட்டை விட்டு பிரிந்தப் பறவைப் போல உடம்பை விட்டு அவர் பிரிந்து போனார். என்னுடைய சகோதரர், நண்பர் சிலகாலம் உலவித் திரிந்த பொழுதிலும் இன்று அருவமாகி இருக்கின்ற நிலையிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை யாருடைய மனதையும் விட்டுப் பிரியாது. அறம்சார் தர்மம் நற்கதியையே அவருக்கு கொடுக்கும். நரக வேதனை என்பது அவருக்கு கிடையாது. அவர் அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்து விட்டார். பரமசிவனே இந்தப் பசுவை உன்னுள் சேர்த்துக் கொள்ளும் அப்பா என்று கலங்கி நான் பிரார்த்தனை செய்கிறேன். என் சகோதரியின் மனதிற்கு பிரார்த்தனை செய்கிறேன். 
இதற்கு காரணம் நமக்கு தெரியாது. கர்மா என்று சொல்லிவிடலாம் ஆனால் நிரூபிக்க முடியாது. சாபம் என்று சொல்லிவிடலாம் அதையும் நிரூபிக்க முடியாது. இப்படி நிரூபிக்க முடியாத நிலையில் கண்ணெதிரே ஒரு மரணத்தை காண்கின்ற பொழுது வள்ளுவர் தான் நமக்கு கைக்கொடுக்கிறார். உறங்குவது போலும் சாக்காடு உறங்கி எழுவதும் போலும் பிறப்பு என்கிறார். ஆற்று வெள்ளம் அடித்துச் செல்வது போல உயிர் பிரிந்து விட்டது ஆனால் இருப்பவர்கள் சொல்லொணா துயரில் அவதிப்படுகிறார்கள். எனது சகோதரி திருமதி. ராஜரத்னம் அன்பே வடிவான அவரது அன்னையார் அவர்களை நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. புத்திரனின் மரணத்தை தாயார் காண்பது கொடூரத்தின் கொடூரம். திருமதி. ராஜரத்னம் கதறி அழுதப் பொழுது என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. இந்த உயிர் எங்கு இருக்குமோ, என்ன செய்து கொண்டிருக்குமோ, அதற்கு தவிப்பு உண்டா, அது இரண்ணிய கர்ப்பத்திற்கு போகுமா, அதற்கு அமைதி உண்டா, அது மறுபிறப்பு எடுக்குமா இவை ஒன்றும் நம்மால் விடைசொல்லா முடியாத பதில். ஆனால் ராஜரத்னம் என்ற மனிதப்பண்பு அவருடைய ஒழுக்கம் என்றென்றும் எங்களுடைய இதயத்திலாவது நிலைத்து இருக்கும். 
மரணமே உன்னை ஒரு மரணம் வந்து தழுவாதா? விபத்தே உன்னை ஒரு விபத்து தழுவாதா? துக்கமே உன்னை ஒரு துக்கம் சூழாதா, பரிதவிப்பே நீ ஒரு நாள் பரிதவிக்க மாட்டாயா? என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ஞாயிறு, 16 ஜூன், 2013

பிஷக் உத்தமன்

மருத்துவர் இல. மகாதேவன் - பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்) 
கட்டுரை - மருத்துவர். சுனீல் கிருஷ்ணன்
இக்கட்டுரையை காண   http://solvanam.com கிளிக்கவும்.

செவ்வாய், 4 ஜூன், 2013

Malaysia visit

Dr.L.Mahadevan visited Malaysia, from May 2nd to May 4th to deliver his treasured classes on ayurveda, at BKS Iyengar Yogashala, Kuala lumpur. The classes were about “Ayurveda, the traditional Indian medicine”.  The doctors practicing allopathic system and other traditional medicinal systems were the participants. Dr.Mahadevan’s class covered all  basics of ayurveda, including the topics like ayurveda and philosophy, understanding the mind, body constitution in ayurveda, dietetics in ayurveda, , agni and its importance and preventive medicines in ayurveda. There were about 100 doctors in his class. The feedback of the classes were excellent.





திரிதோஷ தத்துவ மரபில் நவீன விஞ்ஞானத்தின் (மருத்துவத்தின்) தன்மைகளை உள்வாங்குவதில் உள்ள ஆதரவும் எதிர்ப்பும்

பிப்ருவரி 14 - டாக்டர். பி. வைத்தியநாதன் சார் நினைவு நாள் கட்டுரை 

     திரிதோஷ தத்துவ மரபை ஏற்றுக் கொள்வதில் மேலை நாட்டு மருத்துவர்களுக்கும், நமது நாட்டில் வாழ்கின்ற ஆங்கில மருத்துவத்தை விதிவசத்தால் படித்த ஒரு சில மருத்துவர்களுக்கும், ஒரு அகத் தடை இருந்து கொண்டெ இருக்கிறது. வாத, பித்த, கபங்கள் என்று ஒன்றும் இல்லை, என்றும் இவை வெறும் சொற்றொடர்கள் மட்டுமே என்று மெய்ஞானம் பெறாமல்  சொல்பவர்கள் உண்டு.

இந்த விவாதங்கள் இன்று அதிகமாகப் பேசப்படுவதில்லை. இந்திய மருத்துவ இயலில் முக்குற்ற மெய்ஞானம், தனக்கென்று உள்ள சத்திய நிலையை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது. திரிதோஷ அடிப்படையில் உள்ள நம் பாரத நாட்டு மருத்துவம் நவீன பார்வையிலிருந்து வேறுபட்டது என்பது ஏற்கப்பட்டு வருகிறது. இந்த தனித்தன்மைதான் என்ன? மேலைநாட்டு மருத்துவத்துறை பிரபஞ்சத்தையும், அக வாழ்க்கையையும் விட்டு வெளியேறி உடல் சார்ந்த நோய்களை மட்டும் நிழற்படங்கள் மூலம் வரையறுத்து சிகிச்சை செய்து கொண்டிருந்தது (ஒரு நிலை வரை இது தேவை என்றே நான் கருதுகிறேன்). 

  இக்காலமானது மாறி, வெளி நம்பிக்கையை மட்டும் சாராமல் மருத்துவம் என்பது இறையியல் மற்றும் அறவியல் இவற்றிலிருந்து பிரிக்க முடியாத, மற்றும்  தனித்தும் இயங்க முடியாத ஒரு தத்துவம் அல்லது த்ர்சனம் என்பதை இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேத மருத்துவமும் சித்த மருத்துவமும் போதித்து வருகின்றன. 

மேலைநாட்டு மருத்துவம் சில விதிகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றுள்ளேயே இயங்குகிறது. Evidence based medicine (ஆதாரம் சார்ந்த மருத்துவம்) என்ற ஒரு தத்துவத்தை அது பறை சாற்றுகிறது. நாம் நவீன மருத்துவ இயலில் பல வளர்ச்சிகளை மனமார ஏற்றுக் கொண்டு அவற்றைப் போற்றினாலும் திரிதோஷ மெய்ஞானத்தில், எல்லாவற்றையும் உள்ளடக்கி நவீன மருத்துவத்திற்கும் இந்திய மருத்துவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கி, ஒருங்கிணைந்து நன்றாக செயலாற்ற முடியும் என்று நம்பி சிகிச்சையளித்து வருகிறோம். யதார்த்தத்தில் இதில் வெற்றிகள் பல. தோல்விகள் சில.

ஒரு எல்லை உடல் நிலை நோய்கள்
மறு எல்லை மெய்ஞானம். 
ஒரு தரிசனம் ஆயுர்வேதம்
மற்றொன்று ஆங்கில மருத்துவம். 
இவற்றுக்கு நடுவில் அன்றாட வாழ்க்கை. 

இந்திய மருத்துவத்திற்கு என்று தனி தத்துவம் இருக்கிறது.  ஒரு தேடல் இருக்கிறது. தேடுதல் மூலம் கண்டடைதல் உள்ளது.  இவை பிரிக்க முடியாமல் இருக்கின்றன. சில வரையறுக்க (கருவிகளால் காண இயலாத) முடியாத விஷயங்களை இந்திய மருத்துவம் பேசுகிறது. ஆண்டாண்டு காலமாக இறை இயலைத் தொட்டு அந்த விஷயம் நடந்து வருகிறது. பிரிக்கமுடியாதபடி வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் பார்கும் பார்வையின் விளைவே முக்குற்ற மெய்ஞானம். பகுத்தறியும் நோக்கை மேலை நாட்டு சிந்தனை பெரிதும் சார்ந்திருக்கிறது. ஆயுர்வேத மருந்துகளுக்கு என்று பலசுருதிகள் (பிரயோகங்கள்) உள்ளன. இருந்தாலும் எல்லாவற்றுக்கும் நமது இறுதி நிலை என்பது விடுதலை என்பதுதான். 

· நோயிலிருந்து விடுதலை,
· அறியாமையிலிருந்து விடுதலை,
· துக்கத்திலிருந்து விடுதலை,
· பெருமைச் சூழலிலிருந்து விடுதலை,


இந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவம். ஒரு மெய்ஞான தேடுதலின் அம்சமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த விடுதலைக்கான சிந்தனைகள் நிகழ வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். நமக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவைத் தெளிவாக்க (சரகர் கூறியபடி) திரிதோஷ அறிவு பாலமாக அமையும் என்றே நினைக்கிறேன். 

என் அகம் தெளிந்திருப்பதால் திரிதோஷம் சார்ந்த மருத்துவச் சூழலில் மேற்படியாக நடக்கும் Superficial discussion களை (சிகிச்சா ஞானமோ, அகத் தெளிவோ இல்லாமல், நடக்கும் மேல்மட்ட உரையாடல்கள்) நான் கவனிக்காமல் சிகிச்சையளிப்பதில் முழு முனைப்போடு செயல்படுகிறேன். மண்டையைப் பிளக்கும் சொல் ஆராய்ச்சிகள், பேராசிரியர் மற்றும் முதல்வர் பதவியை அடைய நடக்கும் அரசியல்கள், மடக்கி மடக்கி முன் வைக்கப்படும் தர்க்கங்கள், பிறர் சொன்னதையே திருப்பிச் சொல்லும் தத்தை போன்ற மனப்பாட பாடல்களின் ஒப்புவிப்புகள்,இவற்றிலிருந்து விலகி சிகிச்சையளித்து அதன் மூலம் திரிதோஷத்தை உணர்ந்து பிறருக்கு போதிக்க முயற்சிக்கிறேன். திரிதோஷம் சார்ந்த பூசல்களில் நான் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் நான் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் சிகிச்சை செய்கிறேன். என் குருநாதர் சொல்லித் தந்ததுதான் சரி என்று நான் வாதிட வரவில்லை. என் குருநாதர் சொல்லித் தந்ததும் சரி என்றே நான் வாதிடுகிறேன். ஒரு மஹாவித்வான் கல்யாணியை பல ரூபங்களில் பாடுகிறார்; இன்னொருவர்; வேறு கோணத்தில் பாடுகிறார். இறுதியில் கல்யாணி பாடினாரா என்பதே கேள்வி. அதுவும் இதயத்தைத் தொட்டதா என்பதும் மற்றொரு கேள்வி அந்த நிலையிலேயே திரிதோஷத்தை நான் கையாண்டு வருகிறேன்.

இந்த தத்துவங்களில் ஐயம் கொள்ள எனது மாணவர்களுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. அந்த தத்துவத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்ய நான் உதவுகிறேன். இதுதான் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட அல்லது வரையரைக்கப்பட்ட காலத்திற்குள் பாடத்திட்டத்தை முடிக்க பிரயத்னப்படும் ஒரு பேராசிரியருக்கும்  எனக்கும் உள்ள வேறுபாடு. எனக்கு எனது முழு வாழ்க்கையும்  திரிதோஷ பாடத்திட்டமாகும் அனுதினமும் தேர்வுமாகும்.  ஓரோர் நோயாளியும்  என்னுடைய பாட முறையில் தேர்வாளர்கள் ஆவர்.

படிப்பவவர்கள் முதலில் உள்ளை அறிய வேண்டும். இதை Applied Tridosha என்று சொல்வேன்.   இந்நிலையில் தன் அகத்தை தானே காணவும், அதன் மீதான கட்டுப்பாட்டை அடையவும் இது கைகொடுக்கும்; என்பது என் பாடமுறை. நமது சிந்தனை முறை உடலையும், மனதையும் பிடித்துப் பார்ப்பது அல்ல. உடல் மனம் என்கிற ஒரே அமைப்பாகவே மனிதனைப் பார்க்கிறது. முழுமையான ஒரு மருத்துவத் தீர்வை நோக்கிச் செல்லவே உடலையும், மனதையும் ஒன்றாகக் காணும் திரிதோஷத்தின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. திரிதோஷ ஞானமோ திரிதோஷத்திற்காக அளிக்கப்படும் மருந்துகளோ ஊடுருவி படிமன்கள் போல செயல்படக் கூடியவை. இவை நமது தர்க்கத்தைத் தாண்டி பல அடுக்குகளை சென்று சேரும் படிமங்கள்  அவற்றுடன் நவீனம் சேருவது நோயாளிகளுக்கு நல்லது. நமக்கும் தவறுகள் குறையும். 

மனித பிரக்ஞை என்பது மனித உடலிலிருந்து விடுபடமுடியாதது.
நம் அகம் என்பது நாம் நமது உடலில் புலன்கள் மூலம் உணரும் அறிதலின் நுண் படிவமாகவே உள்ளது. படிமங்களாலும், மொழி  உருவங்களாலும்தான் நாம் நமது அகத்தை உணர முடிகிறது. அதில் நம் கல்லூரிப் படிப்பும் (BAMS) படிகிறது. அதைப்பின் நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. திரிதோஷத்தின் அகால  இருப்பு சூக்ஷ்மமானது என்பது சாதாரணமான நம் அறிதல்களுக்கு அப்பால் உள்ளது. இந்த நிலையிலிருந்தே திரிதோஷத்தின் தாக்கம் தொடங்குகிறது.

திரிதோஷ ஞானம் என்பது ஒரு தேடல். அதற்கு ஒரு குரு, ஆசிரியர் இருந்தால் நல்லது. அவ்வாறு ஒருவர் அமையும் வரை நமக்குப் பல விஷயங்கள்  புரியாது.  அடி ஆழத்தை திறக்க முடியாது. அது திறக்க முடியாமல் விடுதலையும் இல்லை. அதனைத் திறந்து பரிசீலித்தாக வேண்டும். அதனை முன்னிலைப் படுத்த ஒரு ஆசிரியர் வேண்டும்.  அந்த குருவை நீங்கள் சோதித்து நோயாளிகளை வைத்து விசாரணை செய்து ஏற்கலாம். இங்கு அவநம்பிக்கையும் அளவுகோலாக இருக்கலாம். ஆனால் அவரை ஏற்றபின், அந்த நம்பிக்கை உங்களை வெகுதூரம் எடுத்துச் செல்லும். குருவுடன் சேர்ந்து நீங்களும் வளர்வீர்கள். குரு உங்களை உடைத்து வார்ப்பார். அவர் அறிவின் பிரக்ஞை  உங்கள் மீது மோதும் பொழுது ஏற்படும் வலி பயங்கரமாக இருக்கும். நாம் நம்மை இழப்பதை உணர்வோம்.  இந்த நிலையில் நாம் நம்மை தக்க வைத்துக் கொள்ள போராடுவோம். இழப்பு நமக்கே. கல்லூரியில் நம்மை உடைக்காதவர்; நமக்குப் புதிதாக எதுவும் தருவதில்லை. திரு. வைத்தியநாதன் சார் என் அகத்தை உடைத்தார். ஆழ்ந்த சாஸ்திரம் இல்லாத நிலையில் ஆசிரியர் ஒருவர் தன் மனதில் தற்செயலாகத் தோன்றும் எளிய கருத்துக்களை அறிய ஞானத்தின் திறப்புகளாக எண்ணி வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஞானத் துளிகள் வெளியில் வருவதற்கு ஆழ்ந்த சாஸ்திர பாடம் வேண்டும். இதற்கு பயிற்சி தேவை. நாம் அடைந்த அனுபவத்திலிருந்து பாடம் பெற்றுக் கொண்டால்தான் இந்த ஞான வெளிச்ச விளக்கவுரைகள் வெளியே வரும். 


· திரிதோஷம் என்பது ஒரு மருத்துவச் சொல்.
· ஒரு கலாச்சாரச் சொல்.
· ஒரு பண்பாட்டுச் சொல்.
· ஒரு யதார்த்தச் சொல்.
· ஒரு உயிரோட்டமுள்ள சொல்.
· ஒரு பிரக்ஞையை பிரதிபலிக்கின்ற சொல்.
· இது வேதங்களின் பிராணனை வெளிப்படுத்தும் சொல்.
· இது எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல.
· இது எவர் கட்டுப்பாட்டிலும் உள்ளதல்ல.

இது மண்ணில் உள்ள நதிகளைப் போல காடுகளைப் போல இங்கே பிறந்த அல்லது எந்த நாட்டிலும் பிறந்த அனைவருக்கும் சொந்தமானது. இது என்னுடையது என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

முன்பே கூறியபடி, திரிதோஷ அறிதல் அகவயமான ஒரு அறிதல், அதனால் உண்டாகும் ஒரு ஆற்றல் அகவயமானது. இது எல்லா பரிணாங்களையும் உள்ளடக்கியது.  சிகிச்சை என்ற ஒரு தளத்தின் மூலம் புறவயமாக அதனை நிரூபிக்க முடியும். அனைத்திலும் திரிதோஷத்தை காண இயலாதவர்கள், BP பார்க்க மறுப்பவர்களெல்லாம் இந்த மனநிலைக்குள் வர முடியாதவர்கள். ஒட்டு மொத்த திரிதோஷம் மற்றும் நவீனமும் கலந்த ஞானப் பரப்பு ஞான நிலை, ஒரு மோசடி அல்லது ஆயுர்வேதத்துக்கு விரோதமான செயல் என்று இவர்கள் சூளுரைக்க வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருப்பதும், நாம் பார்த்துக் கொண்டிருப்பதும் அதுவே. இதன் காரணம்; அவர்களுக்கு அனைத்தையும் திரிதோஷத்தில் உள்ளடக்கத் தெரியவில்லை. நமக்குத் தெரிகிறது.

திரிதோஷ கல்வி ஒரு தொழில் நுட்பம் மட்டுமே. இந்த தொழில் நுட்பத்தையே அறியாத இரண்டு மூன்று தலைமுறைகள் உருவாகி வந்தபின் அவர்களிடம் இதைப் பற்றி பேச வேண்டிய நிலைமையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். 

பாக்டீரியாவிலும், வைரஸிலும், புழுவிலும், பூச்சியிலும், மீனிலும், பறவையிலும், தேளிலும், பாம்பிலும், குதிரையிலும், யானையிலும், புலியிலும் திரிதோஷம் இருக்கிறது. வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்ற புரிதலை ஒரு ஆசான் ஏற்படுத்த வேண்டும்.

திரிதோஷத்துக்குரிய தெளிவியலை, நாமே முனைந்து ஆசானை அடைந்து பல படிகள் ஏறி, அகத்தில் தெளிவு பெற்று, மூட நம்பிக்கைகளை அழித்து மனப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு, மேலே சென்று, பயணத்தின் எல்லா படிகளையும் கடந்து, மெய்ஞானம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இது ஒரு தூய மெய்த் தேடலாக எந்தவித அடையாளமும் அற்றதாக அந்தரங்கமாகவே இருக்கிறது. எனது மாணவர் கூட்டம் இதை ஒரு நாள் பிரகடனப்படுத்தும்.

அதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறலாம்.

திரிதோஷ நிராகரிப்பது என்பது நவீன மருத்துவர்களால் இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இதை வெறும் புத்தகக் குறிப்பாக மட்டுமே பார்ப்பது முழமையற்றது. அப்படியே, தத்துவமில்லாமல் தூய உணர்வு எனக் கற்பனை செய்து கொண்டும் எதையும் கற்க, புரிய,  அறிய முயற்சிக்காமல் இருப்பதும் முழுமையற்றது.

திரிதோஷ கல்வியை படித்தததற்காக நம்மில் பலர் நவீனத்துடன் இணைந்து செயலாற்றாமையை ஒரு நிலைபாடாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தத்துவமற்ற உள்ளுணர்வு, வெளிக்கு சுயம்புவாகச் சென்றுவிட்டதாகப் பாவனையும் செய்வார்கள். அறியாமை என்ற முள் அவர்களிடம் உள்ளது. அதை ஆணவ முள் மறைக்கிறது. அதை வைத்துக் கொண்டு வெகு தூரம் செல்ல முடியாது. அவர்கள் செய்வது ஒரு தர்க்க வாதமே. அந்த முள்ளினால் குத்தப்பட்ட கால் பழுக்கலாம். நாளை நாம் நவீனத்தை நாடலாம். என்னால் அதை நாடும் பொழுது எனது தன்மையை இழக்காத முறையில் நாடமுடியும். இது அவர்களுக்கு புரிவதும் இல்லை, அவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வதும் இல்லை. விஞ்ஞானத்துடன் இணைதல் மூலமே ஒரு உச்சக்கட்ட சாத்தியம், மருத்துவத்தில் கோடிட்டு காட்டப்படுகிறது.

இந்த பூமியில் வாழும் எந்த மனிதனும் திரிதோஷ தர்சனம் இல்லாதவனாக இல்லை. இந்த உலகத்தில் பிறப்பு.  செயல்பாடு, அழிவு விடுத்து அவனுக்குள் ஒரு உருவகம் இருக்கும். உருவகம் இருந்தால்தான் சொந்த வாழ்க்கையை அவனால் வகுத்துக் கொள்ள முடியும்.  இதையே ஆயுர்வேதம் மஹாபிரக்ருதி என்கிறது. பிரக்ருதிக்குள்ளளேயே நாமெல்லாம் அடங்குகிறோம். இந்த அடக்கம் தூய அறிவையும் உட்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லாமே திரிதோஷம்தான். அப்படி இருக்கும் போது தனி நவீனம் எங்கே, சுத்த ஆயுர்வேதம் எங்கே?

திரிதோஷ ஞானம் என்பது ஒரு எல்லையை உயர் தெளிவையும், சிகிச்சையையும், தினச்சர்யையும்,ருதுச் சர்யையும், வேக அவரோதத்தையும், எடுத்துக் கொண்டு, தொடர்ச்சியாக ஒரு வைத்தியன் நிகழ்த்தும் ஒரு யக்ஞமே.

 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, இந்த யக்ஞம் பல வைத்தியர்களால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. பலவிதமான இணைப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த திரிதோஷ யக்ஞத்தை செய்யாத வைத்தியர் யாரும் இல்லை. இந்த திரிதோஷத்தை தொட்டுப் பார்க்காத வைத்தியர் எவரும் இல்லை.  நவீனமோ, பழமையோ, அங்கு திரிதோஷம் இருக்கிறது என்பதும், திரிதோஷதிலிருந்து எந்த இந்திய தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும், இயைபியலையும் பிரிக்க முடியாது என்பதே உண்மை. அவ்வாறு சுத்த ஆயுர்வேதம் என்றுக் கூறி பிரித்தால் பூரண மெய்ஞான  தத்துவத்திலிருந்து நம்மை நாமே விலக்கிக் கொண்டு விடுகிறோம் என்பதே சத்தியம். இப்படி முடியாது என்பது புரிந்து  கொள்ள வேண்டும்.

அவ்வாறு புரிந்து கொள்ளாதவர்களுக்காக நாம் மெளனம் சாதிப்பதோ அல்லது ஒதுங்குவதோ தான் சிறந்த வழி. ஏனென்றால் அவர்கள் திருந்தப் போவதில்லை.

தெளிவுடன்,
மருத்துவர். இல. மகாதேவன்.